search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர் பாலியல் தொல்லை"

    பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பேசிய ஆடியோ வெளியிட்ட வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சிலரை முக்கிய பிரமுகர்கள் சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேல் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் காட்டுவதாக வக்கீல் அருள் புகார் தெரிவித்திருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் 6 நிமிடம் 48 வினாடி பேசிய ஆடியோவினை நிருபர்கள் முன்னிலையில் வக்கீல் அருள் வெளியிட்டார்.இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வக்கீல் அருள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண், என்னுடன் செல்போனில் பேசிய ஆடியோவை வெளியிட்டதில் இருந்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகர் தூண்டுதலின் பேரில், அரசு வக்கீல் மற்றும் சிலர் என்னிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. வக்கீல் அணி சார்பில் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வக்கீல் ஒருவர் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியையும் பரப்பி வருகிறார். மேலும் கட்சிக்கு அவப்பெயரையும், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்தியினை அவர் வெளியிட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, அந்த வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பெரம்பலூர் பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 4-ந்தேதி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த உள்ளன. இதனால் பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூர் பாலியல் சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
    ×