search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெடார்"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் பிரிவில் 11 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை எதிர்கொண்டார். ‘களிமண் தரை’ போட்டியின் ராஜா என்று வர்ணிக்கப்படும் நடால் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தியதோடு 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் யானிக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 32 வயதான நடால் அடுத்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-6, 6-0, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹூகோ டெலியனை (பொலிவியா) தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2016-ம் ஆண்டு சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) சாய்த்து 3-வது சுற்றை எட்டினார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த கிறிஸ்டினா குகோவை (சுலோவக்கியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். பிளிஸ்கோவா வெறும் 56 நிமிடங்களில் இந்த வெற்றியை சுவைத்தார். மற்றொரு முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன் மோத இருந்த சக நாட்டவரான கத்ரினா கோஸ்லோவா உடல் நலக்குறைவால் விலகியதால் ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்த ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பொட்டாபோவா 2-வது சுற்றில் 4-6, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் வோன்டோரோசோவாவிடம் வீழ்ந்தார். அதே சமயம் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினருடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)- மார்டோன் புசோவிக்ஸ் (ஹங்கேரி) இணையை தோற்கடித்தனர்.
    ×