search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு ரசாயன கழிவு"

    பெங்களூரில் இருந்து அதிக அளவில் தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் தான் தண்ணீர் மாசு அடைந்து நிறம் மாறி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Metturdam
    சேலம்:

    தமிழகத்தில் மேட்டூர் அணை சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட 12 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.

    மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தில் உள்ள தண்ணீர் பச்சை நிறத்தில் மாசடைந்த நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக 16 கண் பாலம், கோட்டமேடு, பண்ணவாடி ஆகிய பகுதியில் அதிக அளவில் பச்சை நிறத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் இதேபோல் தண்ணீர் தேங்கியதால் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அணைக்கு வந்து நிறம் மாறி இருந்த தண்ணீரை மாதிரிக்காக எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை அதுகுறித்து அறிக்கையை வெளியிடவில்லை.

    இந்த நிலையில் மீண்டும் தண்ணீர் நிறம் மாறி இருப்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள், விவசாயிகள் அந்த தண்ணீரை குடிக்க முடியாமல் வீட்டில் இருந்தே தண்ணீர் எடுத்து செல்கிறார்கள்.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் பெங்களூரில் இருந்து அதிக அளவில் தொழிற்சாலையில் உள்ள ரசாயன கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் தான் தண்ணீர் மாசு அடைந்து நிறம் மாறி உள்ளது.

    இந்த தண்ணீரை குடித்தால் பல்வேறு நோய்கள் பரவுவதோடு, நிலத்தடி நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டு உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசும், அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.



    மாறாக மேட்டூர் அணையின் உள் பகுதியில் பயிரிடும் விவசாயிகள் பயன்படுத்தும் உரங்கள் தான் காரணம் என்று பகிரங்கமாக அரசியல் பிரமுகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    நாங்கள் ரசாயன உரங்களை பயன்படுத்துவது கிடையாது. இயற்கை உரங்களை தான் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் மீது வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார்கள், இது தவறானது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு காவிரி தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடை செய்வதுடன் 12 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகளின் உயிர் ஆதாரமாக திகழும் காவிரி தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.69 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2,228 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 5400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  #Metturdam



    ×