search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை கொள்ளையன் கைது"

    புதுவை அருகே வீடு புகுந்து நகை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரம்பை கிராமத்தை சேர்ந்த செந்தில் குமார். இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 பவுன் நகை திருட்டு போனது. இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற 2 பேர் பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து செந்தில் குமார் மனைவி அன்புக்கரசி (35) கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதே போல் கோட்டக் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் திருட்டு போனதால் தனிப்படை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இன்று காலை சப்- இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பெரம்பை கிராமம் அருகே உள்ள முட்புதரில் 2 பேர் மறைந்து இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

    பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாகூரை அடுத்த இருளன் சந்தை கிராமத்தை சேர்ந்த சுசி என்கிற சூசைராஜ் (21) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடியவர் இவரது கூட்டாளி முதலியார்பேட்டையை சேர்ந்த அருள் என்பது தெரிய வந்தது. சூசைராஜிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் பெரம்பை அன்புக்கரசி வீட்டில் திருடியவர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

    சூசைராஜை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 4 பவுன் நகையை பறிமுதல் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய அருளை போலீசரர் தேடி வருகிறார்கள்.

    ×