search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி‌ஷப்"

    ஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.

    அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பி‌ஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaNuns  #bishop
    கேரளாவில் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப்பை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #nunsprotest

    திருவனந்தபுரம்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் மீது கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி இருந்தார்.

    பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல் கோட்டயத்திற்கு வந்திருந்தபோது அங்குள்ள கான்வென்ட் விருந்தினர் இல்லத்தில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக குருவிலாங்காடு போலீஸ் நிலையத்திலும் அவர், புகார் செய்தார். பி‌ஷப் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த புகார் பற்றி வைக்கம் போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று அந்த பி‌ஷப்பிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதனால் பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் நிலவியது.

    ஆனால் தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் கேரளா திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அந்த கன்னியாஸ்திரி பணியாற்றிய மடத்தைச் சேர்ந்த 5 கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டதால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்ய வேண்டுமென்று எழுதப்பட்ட பதாகைகளையும் கன்னியாஸ்திரிகள் கைகளில் ஏந்தி கோ‌ஷ மிட்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகள் பேசுகையில், பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரிக்காக நாங்கள் தற்போது போராடி வருகிறோம். தேவாலயம், அரசு, போலீஸ் என்று யாரிடமிருந்தும் அந்த கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே நாங்கள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பி‌ஷப்புக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தபோதும் போலீசார் அவரை கைது செய்யவில்லை. இனி எங்களது ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான் என்றனர்.

    இன்று 2-வது நாளாகவும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நீடித்தது. பி‌ஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் பொது இடத்தில் திரண்டு போராட்டத்தில் குதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.  #nunsprotest

    ×