search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெக்சிட் ஒப்பந்தம்"

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே உருவாக்கிய உடன்படிக்கைக்கு ஆளும்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. #TheresaMay #Brexitdeal #Maynoconfidence
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் - வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.

    இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.

    இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக 4 மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.



    ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜீன்-கிலாட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் ஆகியோரும் 25-11-2018 அன்று புருசெல்ஸ் நகரில் தெரசா மே-வை சந்தித்தனர்.

    பின்னர், பிரிட்டன் அரசின் சார்பில் தெரசா மே முன்வைத்த உடன்படிக்கைக்கு ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக  ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் ஆளும்கட்சியில் இடம்பெற்றுள்ள தெரசா மேவின் எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை தோற்கடிப்பதற்கு மறைமுகமாக முயற்சித்து வருகிறார்கள்.

    மேலும், பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் ரகசியமாக கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.

    650 இருக்கைகளை கொண்ட பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 315 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 257 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 15 சதவீதம் (48) எம்.பி.க்கள் கையொப்பமிட்ட கடிதம் 1922 உயர்மட்டக்குழு உறுப்பினர்களை கொண்ட ஆளும்கட்சி குழு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.

    ஆளும்கட்சியை சேர்ந்த 315 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் (210 உறுப்பினர்கள்) தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தால் தெரசா மே பதவியில் இருந்து விலக நேரிடும்.

    வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தால் அடுத்த 12 மாதங்களுக்கு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை யாரும் கொண்டுவர முடியாது.

    இந்நிலையில், தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 எம்.பி.க்களின் கையொப்பமிட்ட கடிதம் 18 உறுப்பினர்களை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் நம்பகமாக தெரிவிக்கின்றன.

    இதுதொடர்பான தகவலை கிரஹம் பிராடி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, இதில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதி என ஆளும்கட்சியில் உள்ள அவரது அதிருப்தி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி அடைந்தால் கட்சியின் தலைவர் பதவியிலும் அவர் நீடிக்க மாட்டார். மறுமுறை தலைவர் பதவிக்கு போட்டியிடவும் முடியாது. அப்படி ஒருவேளை தெரசா மே பதவி விலகினாலும் புதிய பிரதமர் பதவி ஏற்கும்வரை 6 வார காலம்வரை அவர் காபந்து பிரதமராக நீடிக்க வாய்ப்புள்ளது.

    சமீபத்தில் பதவி விலகிய பிரெக்சிட் துறை மந்திரி டேவிட் டேவிஸ் லண்டன் நகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன், சர்வதேச வர்த்தகத்துறை மந்திரி பென்னி மோர்டுவான்ட், பாகிஸ்தான் வம்சாவளியினரும் உள்துறை மந்திரியுமான சாஜித் ஜாவித், பிரெக்சிட் முன்னாள் செயலாளர் டோமினிக் ராப், உணவு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி மைக்கேல் கோவே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெரெமி ஹன்ட் உள்ளிட்டோர் தெரசா மேவின் இடத்தை நிரப்புவதற்கும் ஆளும்கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்பதற்காகவும் காத்திருப்போர் பட்டியலில் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில், வாக்கெடுப்பு நடந்தால் தெரசா மே பதவி விலக நேரிடுமா? அல்லது தீர்மானம் தோல்வி அடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #TheresaMay #Brexitdeal  #Maynoconfidence

    ×