search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிச்சை எடுத்து பிழைக்கும் பட்டதாரி"

    தேவதானப்பட்டி பகுதியில் கவனிப்பார் யாருமின்றி பிச்சை எடுத்து வரும் மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபரை அரசு அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியைச் சேர்ந்த காமராஜ் மகன் சங்கர் (வயது 32). பட்டதாரி வாலிபரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களது குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயர சம்பவங்களால் பெற்றோர் உயிரிழந்தனர்.

    இதனால் சங்கர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார். உறவினர் யாரும் கண்டு கொள்ளாததால் தெருக்களில் பிச்சை எடுத்து பொதுமக்கள் தரும் காசுகளை வைத்து டீ மட்டும் குடித்து வருவார்.

    மேல் சட்டை அணியாத நிலையில் கைலி மட்டும் அணிந்து தெருக்களில் சுற்றி வரும் இவரை காண்பதற்கு பரிதாபமாக இருக்கும். அரசு சார்பில் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் தெருக்களில் இதுபோல சுற்றித்திரியும் வறியவர்களை மீட்டு அவர்களுக்கு மறு வாழ்வு அளித்து வருகின்றனர்.

    ஆனால் பல வருடங்களாக இதே பகுதியில் சுற்றி வரும் இந்த வாலிபரை யாரும் கண்டு கொள்ள வில்லை. தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போல கேட்பாரற்ற வறியவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

    ஆண்களை விட பெண்கள் மற்றும் முதியவர்களின் நிலைமை மிகவும் கவலை தரும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் இது போன்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மறு வாழ்வு அளிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இவ்வி‌ஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பிச்சைக்காரர்கள் மற்றும் வறியவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×