search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பம்பை ஆற்றுப்பாலம்"

    கேரளாவில் வெள்ளத்தில் அடித்த சென்றதாக கருதிய சபரிமலை பம்பை ஆற்றுப்பாலம் 5 மீட்டர் உயரத்திற்கு மணலால் மூடியிருந்ததால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பத்தனம்திட்டா மாவட்டம் பம்பை ஆற்றில் கடந்து செல்ல வேண்டும்.

    இதற்காக பம்பை ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த 2 பாலங்களும் கடந்த மாதம் கேரளாவை புரட்டிப்போட்ட பேய் மழையில் சேதமானது. மழை பெய்த போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் போக்கும் மாறியது.

    இதில் பம்பை ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்களும் காணாமல் போனது. பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றதாக அதிகாரிகள் கருதினர்.

    இதையடுத்து பம்பை ஆற்றின் மீது புதிய பாலம் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக ஏற்கனவே பாலம் அமைந்திருந்த பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கியது. கடந்த 3 நாட்களாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாலப்பகுதியில் தேங்கி இருந்த மணல் அகற்றப்பட்டது.

    அப்போது 5½ மீட்டர் ஆழத்தில் ஏற்கனவே இருந்த பாலம் மணல் மூடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது பாலம் ஆற்றுமணலில் மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சீரமைப்புக் குழுவினர் பாலத்தின் மீது மூடிக்கிடந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பாலத்தின் உறுதி தன்மையை சோதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வுக்கு பிறகு பாலத்தை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பது தெரியவரும். அதே நேரம் இந்த பாலத்திற்கு பதில் ஏற்கனவே அரசு திட்டமிட்டப்படி இங்கு புதிய பாலம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் எத்தகைய மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டாலும் போக்குவரத்து பாதிக்காத அளவில் இப்பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளும் நடந்து வருகிறது. #KeralaFloods
    ×