search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை சாலை"

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். #Greenwayroad #Thirumavalavan

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அவர் கோ‌ஷம் எழுப்பினார்.

    தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் நீதிமன்றம் மூலம் திறக்க விடாதபடி நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும்.

    குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் முறையை அரசு கைவிட வேண்டும்.

    வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய-மாநில அரசுகள் துணை போகக்கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தி பொய்வழக்கு போடக் கூடாது.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    ஆனால் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    ஏற்கனவே 4 வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. அதை மேலும் விரிவாக்கம் செய்து செயல்படுத்தலாம். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி என்று கூறி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக மக்கள் கருதுகிறார்கள்.

    நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை திசை திருப்பி இத்திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. இத்திட்டம் சேலத்தை மையமாக கொண்டு ஏன் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இந்த சாலையை அமைக்கலாமே. சேலத்துக்கு கொண்டுவருவதன் நோக்கம் என்ன?

    தனியார் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இது போன்று அமைகின்ற பசுமை சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசு, தனியார், பொது மக்கள் ஆகியோர் சேர்ந்து செயல்படுத்தும் விதமாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவைவிட அதிகமாக வசூலித்து மோசடி செய்கிறார்கள்.

    மக்கள் திட்டம் என்ற அடிப்படையில் சுங்கசாவடி அமைத்து தனியார் சம்பாதிக்க வழிவகுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆளுர்ஷா நவாஸ், செல்லத்துரை, இரா.செல்வம், ராஜேந்திரன், இளங்கோ, கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேவ அருள் பிரகாசம் தலைமை தாங்கினார். இதில் மண்டல செயலாளர் விடுதலை செழியன், சாமுவேல், பொற்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் இருந்து சேலத்திற்கு பசுமை வழிச்சாலை அமைய உள்ளது. தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இந்த சாலை மார்க்கமாக இணைக்க பெரிதும் உதவுகிறது.

    மேலும் விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிற நகரங்களுக்கு துரிதமாக கொண்டு செல்ல இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சாலையின் வடிவமைப்பில் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமான வரை தவிர்க்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் தோராயமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 ஹெக்டேர் பரப்பு வன நிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே அகற்றப்படுவதுடன், இந்த சாலை சுமார் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி மலை பகுதிக்கும், பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கவுத்திமலை கனிமம் குறித்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்து முடிக்கப்பட்டு விட்டது.

    பசுமையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கவுத்திமலை.


    எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கவுத்தி மலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது. இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 ஹெக்டேர், புன்செய் நிலங்கள் 605 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டம் பொதுமக்களின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்தக் கூடியதாகும். இந்த திட்டம் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் சீரிய திட்டமாகும்.

    இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எக்காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    ×