search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் வருகை"

    சபரிமலையில் போராட்டங்கள் குறைந்ததால் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அப்பம், அரவணை விற்பனையும் உயர்ந்துள்ளது. #Sabarimala #Devotees
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    சபரிமலையில் பக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. வெளி மாநில பக்தர்களும் சபரிமலை செல்ல தயங்கினர்.

    சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. பக்தர்களுக்கு போலீசார் இடையூறு செய்யக்கூடாது. அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பவும் தடை விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

    மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் குழுவையும் நியமித்தனர்.

    ஐகோர்ட்டின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் போலீசாரின் கெடுபிடிகள் குறைந்தன. போராட்டக்காரர்களும், சபரிமலையில் நடந்த போராட்டங்களை நிறுத்திக் கொண்டனர்.

    அவற்றை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகம் முன்பு நடத்தி வருகிறார்கள். இதனால் சபரிமலையில் அமைதி திரும்பியது. இதற்கிடையே ஆய்வுக்கு சென்ற ஐகோர்ட்டு குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர்.

    போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், ஐகோர்ட்டு குழுவின் திருப்திகர பேட்டிகளும் ஐயப்ப பக்தர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்கத்தொடங்கியது.

    தொடக்க நாளில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்ற நிலையில் கடந்த வாரம் முதல் 50 முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கினர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் அப்பம் விற்பனையும், உண்டியல் வசூலும் பல லட்சங்களை தாண்டும். இந்த ஆண்டு முதல் 15 நாட்களில் அப்பம், அரவணை விற்பனை, உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.

    கடந்த 3 நாட்களாக அப்பம் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிமாநில பக்தர்கள் வருகையால் உண்டியல் வசூலும் கணிசமாக உயரும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் இலவச ஓய்வு மையம் செயல்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. கோட்டயம், செங்கனூர் ரெயில் நிலையங்களில் 24 மணி நேரம் செயல்படும் உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு 500 பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  #Sabarimala #Devotees



    சபரிமலையில் ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட்டு நியமித்த 3 பேர் குழுவினர் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர். #Sabarimala #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

      சபரிமலை சன்னிதானத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.

    நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.

    இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.  #Sabarimala #KeralaHC


    ×