search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மாணவி"

    திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றார். அப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த அம்மு என்பதும் பிளஸ்-2 படித்துவரும் அவர் தேர்வுக்கு பயந்து சென்னைக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து மாணவியை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகர் விலக்கில் இருந்து சேரகுளம் செல்லும் சாலையில் கெமிக்கல் கம்பெனி ஒன்று இயங்காமல் மூடி கிடக்கிறது. அந்த கம்பெனி வளாகத்துக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலையில் மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த இளம்பெண்ணின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது.

    அவரை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அந்த இளம்பெண் யார்? அவரை கொன்றது யார்? என்பது தெரியவில்லை. ஆகவே அது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த இளம்பெண் நெல்லை பேட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த மதார் மைதீன் என்பவரின் மகள் ஆஷிகா பர்வீன் (வயது 17) என்பது தெரியவந்தது. அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

    நேற்று காலையும் வழக்கம் போல் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, சற்று நேரத்தில் வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள பழைய கெமிக்கல் கம்பெனி வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    மாணவி ஆஷிகா பர்வீனை கொலை செய்தது யார்? அவர் சம்பவ இடத்திற்கு எப்படி சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

    மாணவி ஆஷிகா பர்வீன் கம்ப்யூட்டர் மையத்துக்கு தினசரி சென்று வந்தபோது, மேலச்செவலை சேர்ந்த முருகன் மகன் சுந்தர்ராஜ் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 6 மாதமாக சுந்தர் ராஜும், ஆஷிகா பர்வீனும் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்கள் காதல் விவகாரம் ஆஷிகா பர்வீனின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆஷிகா பர்வீனுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று கம்ப்யூட்டர் பயிற்சிக்கு சென்ற அவர் மதியம் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து அவரது தாயார், ஆஷிகா பர்வீன் செல்போனுக்கு பிற்பகல் 2 மணி அளவில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், காதலன் சுந்தர்ராஜனின் படம் தன்னிடம் உள்ளதால் அதை சுந்தர்ராஜிடம் திருப்பி கொடுத்து விட்டு வந்து விடுவேன். இனி அவரை சந்திக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனால் அவரது பெற்றோரும் மாணவி ஆஷிகா பர்வீன் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து விடுவார் என்று அமைதியாக இருந்து விட்டனர். ஆனால் மாலை வரை ஆஷிகா பர்வின் வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போன் தொடர்ந்து ‘ரிங்’ அடித்து கொண்டே இருந்ததால், பெற்றோர் சந்தேகம் அடைந்து தேடியுள்ளனர். அப்போது தான் ஆஷிகா பர்வின் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் ஆஷிகா பர்வீனின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் சுந்தர்ராஜ் பேசியதும், இருவரும் ஒன்றாக அந்த பகுதிக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் போலீசார் காதலன் சுந்தர்ராஜை தேடினார்கள். ஆனால் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவரது செல்போன் ‘சுவிட்ச்’ ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் போலீசார் சுந்தர்ராஜை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தேடுவதையறிந்த சுந்தர்ராஜின் உறவினர்களும் அவரை தேடினார்கள். அப்போது உறவினர் வீட்டில் சுந்தர்ராஜ் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் சுந்தர்ராஜை மூலக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தபோது ஆயிஷா பர்வீனை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுந்தர்ராஜை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சுந்தர்ராஜ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    ஆயிஷா பர்வீனை நான் 6 மாதமாக காதலித்து வந்தேன். எங்களது காதலுக்கு ஆயிஷா பர்வீன் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார்கள். அதற்கு ஆயிஷா பர்வீன் சம்மதித்தார். காதலித்தபோது நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் எங்களிடம் இருந்தன. அதை பெறுவதற்காக ஆயிஷா பர்வீன் என்னை தொடர்பு கொண்டார்.

    அப்போது ஊருக்கு வெளியே சென்று போட்டோவை தருகிறேன் என்று கூறி மூலக்கரைப்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றேன். அங்குள்ள காட்டு பகுதிக்கு வந்ததும் என்னை காதலித்து விட்டு வேறொரு வரை திருமணம் செய்ய எப்படி சம்மதிக்கலாம்? நீ என்னைதான் காதலிக்க வேண்டும் என மிரட்டினேன்.

    அதற்கு அவள் என்னிடம் இருந்து போட்டோக்களை பெறுவதிலேயே குறியாக இருந்தாள். இதனால் ஆத்திரமடைந்த நான் ஆயிஷா பர்வீன் கைகளை கட்டி கீழே தள்ளி கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இந்த கொலையில் சுந்தர்ராஜுக்கு யாராவது உதவி செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன்படி வேறு யாருக்கும் கொலையில் தொடர்பு உள்ளதா? என்று சுந்தர்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×