search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி ஆய்வு"

    • கமுதி கோர்ட்டில் ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
    • சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி ஆய்வு செய்தார். நீதிமன்ற அலுவலக கோப்புகள் மற்றும் குற்ற வழக்குகள் குறித்தும் விசாரித்தார். சிவில் வழக்குகள் மிக குறைவாக பதிவாகியுள்ளது ஏன்? என்று வக்கீல்களிடம் கேள்வி எழுப்பினார். கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி ஸ்ரீமதி மரக்கன்று நட்டு, பணியாளர்களிடம் தினமும் இந்த மரக்கன்றுக்கு கண்டிப்பாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கமுதி நீதிமன்றத்திற்கான சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கியும், கட்டுமான பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் வக்கீல் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் தலைமை நீதிபதி கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி கஜாரர் ஜிஜி, முதுகுளத்தூர் சார்பு நீதிபதி ராஜகுமாரன், பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராம மக்கள் காட்டுப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992-ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை சாதியினர். இந்த கிராம மக்கள் காட்டுப்பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992-ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

    இதையடுத்து அதே ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர் 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

    வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

    இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீசில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

    இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின்போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

    இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக்கோரி 1993-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதையடுத்து கடந்த 1995-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய விசாரணைக்கு பிறகு குற்றம் சுமத்தப்பட்ட 269 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது.

    மேலும் கடந்த, 1996-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    2006-ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

    இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பாக நடந்து வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்யன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிவேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

    மேலும் இன்று சம்பவம் நடந்த தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கு நீதிபதி வேல்முருகன் நேரடியாக வந்து ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி தருமபுரிக்கு வந்த நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்துக்கு இன்று நேரில் சென்றார்.

    அவருடன் தருமபுரி கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் உடன் சென்றனர். வாச்சாத்தி கிராமத்தில் இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் பலர் வயது மூப்பால் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள நபர்களிடம் நீதிபதி வேல்முருகன் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

    இந்த விசாரணையின் முடிவுக்கு பிறகே தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் என்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    • உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பண்ணையைத் திறந்து வைத்து மூலிகைச்செடியை நட்டு வைத்தார்
    • அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களுக்கு இடம் பெற்று சொந்த கட்டிடங்கள் கட்டுதல் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கரூர் மாவட்ட நிர்வாக பொறுப்பு (போர்ட்போலியோ) நீதிபதியுமான மஞ்சுளா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், சார்பு நீதிபதி பாக்கியம் உள்ளிட்ட நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து விரைவு, மகளிர் நீதிமன்றங்களை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலிகை பண்ணையைத் திறந்து வைத்து மூலிகைச்செடியை நட்டு வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சாட்சிகள் விசாரணை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுறுத்தினார்.

    முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், புதிதாக தொடங்கப்பட்டு வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களுக்கு இடம் பெற்று சொந்த கட்டிடங்கள் கட்டுதல் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×