search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகடை அதிபர்"

    காஞ்சீபுரத்தில் நகைக்கடை அதிபரிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் செங்கழு நீரோடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் பா.ஜ.க. கட்சி பிரமுகரான இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றார்.

    நேற்று இவர் கடைக்கு ஒரு போன் வந்தது. மோகன்லாலின் மகன் தினேஷ்குமார் போனை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியவர், ‘‘காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து டாக்டர் பேசுகிறேன். எனக்கு அவசரமாக 3 சவரனில் 5 தங்க சங்கிலிகள் தேவைப்படுகிறது. அவசரமாக ஆபரே‌ஷன் செய்ய ஆபரே‌ஷன் தியேட்டருக்கு செல்லவிருப்பதால் நகைகளை எடுத்து வந்து கொடுத்து விட்டு பணம் வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்.

    இதை நம்பிய தினேஷ் குமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியின் வரவேற்பரை பகுதியில் நின்றிருந்த ஒருவர், ‘‘ஏன் தாமதமாக வருகிறீர்கள் டாக்டர் இவ்வளவு நேரம் காத்திருந்து இப்போதுதான் ஆபரே‌ஷன் தியேட்டரில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். நகைகளை என்னை வாங்கி வரச் சொன்னார். பணத்தை என்னிடமே கொடுப்பார். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்’’ என்று கூறினர்.

    இதை நம்பிய தினேஷ்குமார் நகைகளை அவரிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அவர் நைசாக நழுவி வெளியே சென்று விட்டார்.

    நீண்ட நேரம் காத்திருந்த தினேஷ்குமார் ஆஸ்பத்திரியில் விசாரித்த போது எந்த டாக்டரும் நகைக்கடைக்கு போன் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சிடைந்த அவர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினியிடம் புகார் செய்தார். ஆஸ்பத்தரி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்த போது சந்தேகப்படும்படியான ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர்.

    ஆனால் நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அக்கம்பக்க பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூதன நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    நூதன முறையில் நகைக்கொள்ளை நடந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
    ×