search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர் கடத்தல்"

    • காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார்.
    • கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.

    இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்கள் வேகமாக வந்தன. தொடர்ந்து விமலின் காரை முந்தி வந்த 2 கார்களும், விமலின் காரை வழிமறித்து நின்றது.

    இதனால் விமலும் தனது காரை நிறுத்தி விட்டார். அப்போது எதிரே நின்ற 2 கார்களில் இருந்து 5 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கினர். இறங்கிய வேகத்தில், விமலின் காரை நோக்கி அந்த கும்பல் சென்றது.

    பின்னர், அவர்கள், விமலை தங்களுடன் வா, உன்னிடம் பேச வேண்டும் என அழைத்தனர். அவர் வரமறுக்கவே, வலுக்கட்டாயமாக விமலை மிரட்டி, அவரது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.

    காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சரவணன் தான் உன்னை கடத்த சொன்னார். நீ அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என கூறி மிரட்டினர்.

    பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன விமல் தனது நண்பர்கள் மற்றும் மனைவியிடம் பேசி, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விமலிடம் ஒரு வெற்று பத்திரத்தை காண்பித்து, கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் காரை அவினாசி அடுத்த விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

    கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சரவணன் தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழில் அதிபர் விமலை ஆட்கள் வைத்து கடத்தி தாக்கியதுடன், பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
    • மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை கோரேகான் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இசை கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) இருந்து வருகிறார். நேற்று இவர் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்தது. அவர்கள் துப்பாக்கி முனையில் ராஜ்குமார் சிங்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இதனை தடுக்க முயன்ற அலுவலக ஊழியர்களை அவர்கள் மிரட்டினார்கள்.

    ராஜ்குமார் சிங்கை அந்த கும்பல் தகிசரில் உள்ள சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.எல்.ஏ பிரகாஷ்சுர்லே அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்ஆளும் கட்சியை சேர்ந்த பிரகாஷ்சுர்லே எம்.எல்.ஏ மகன் ராஜ் சுர்லே மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை போலீசார் ராஜ்சுர்லே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.
    • சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். 10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

    சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டினர். பின்னர் அவர்கள் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரை கோவைக்கு கடத்தி வந்தனர். காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர்.

    இது குறித்து சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சையைச் சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (வயது 42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சுப்ரமணியன் கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் பழைய கார்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சின்னதிருப்பதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் 20 சதவீத வட்டிக்கு சுப்ரமணியன் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். பணம் வாங்கிய பிறகு 30 சதவீதம் வட்டி தரவேண்டும் என்று சரண்யா கூறி உள்ளார். இதில் அவர்களுக்கிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரமணியன் அந்த கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர். இது குறித்து சுப்ரமணியனின் மனைவி அன்பரசி (வயது 36) சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சுப்ரமணியனை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் டேவிட் என்ற உதயகுமார் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார், சரண்யா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் டேவிட் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட சுப்ரமணியன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதில் டேவிட் மீது ஜெயில் வார்டன் மாதேஷ் கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.
    • நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபர். இவரை கடந்த 20-ந் தேதி மர்ம கும்பல் காரில் கடத்தியது. இதைதொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரத்திலேயே சரவணன் மீட்கப்பட்டார்.

    விசாரணையில் தொழில் அதிபர் சரவணன் ரூ.1 கோடி பணத்தகராறில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ், கோவை சிறைக்காவலர் நாகேந்திரன், கரூர் அரவிந்த்குரு, திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ், மதுரையை சேர்ந்த அஜய், விஜயபாண்டி என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரிந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடத்தலுக்கு காரணம் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வரும் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பது தெரிய வந்தது.

    சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.

    அவர்களுக்கு இடையே பணப்பிரச்சினை இருப்பதை அறிந்து சரவணன் கடத்தலுக்கு டாக்டர் அமிர்தா திட்டம் வகுத்து கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

    இதையடுத்து டாக்டர் அமிர்தாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே நள்ளிரவு சிறையில் இருந்த டாக்டர் அமிர்தாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நள்ளிரவு 1 மணி அளவில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    அமிர்தாவின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர்.
    • ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 46). கடந்த 20-ந் தேதி இவரை வீடு புகுந்து ஒரு கும்பல் காரில் கடத்தியது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.

    மேலும் தொழில் அதிபரை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவை சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25) என 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறி இருந்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மிரட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்தது தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பதும், அவர் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த வழக்கில் போலீசார் தேடுவதையறிந்து அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையில் டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஆரோக்கியராஜும் இவர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.

    இதற்கிடையே டாக்டர் அமிர்தாவுக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு பகை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சரவணனை கடத்தி பணத்தை பெற அவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அப்போது டாக்டர் அமிர்தா, 'நான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் சரவணன் உடனே வந்துவிடுவார். பின்னர் அவரை இங்குள்ள அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பணத்தை வாங்கி விடலாம்' என்று கூறியிருக்கிறார்.

    அதன்படி சம்பவத்தன்று ஆரோக்கியராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சரவணன் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே, பொம்மை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

    விசாரணைக்கு பின்னர் டாக்டர் அமிர்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×