search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கும் மழைநீர்"

    • நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது
    • மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

    நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

    ×