search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை செல்போன் கடையில் தாக்குதல்"

    திருவண்ணாமலை அருகே செல்போன் கடையில் புகுந்து ஊழியர்களை தி.மு.க. பிரமுகர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தண்டராம்பட்டு:

    சென்னை விருகம்பாக்கம் பிரியாணி கடையில் கடந்த ஜூலை 28-ந் தேதி இரவு தி.மு.க. பிரமுகர் யுவராஜ் தனது ஆதரவாளர்களுடன் பிரியாணி வாங்க சென்றார். பிரியாணி தீர்ந்துவிட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். அப்போது, தி.மு.க. பிரமுகர் யுவராஜ் ஆத்திரம் அடைந்து குத்துச்சண்டை வீரர் போல் ஊழியர்களின் முகத்தில் குத்திய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக யுவராஜ் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு கடைக்குள் தி.மு.க. பிரமுகர்கள் புகுந்து ஊழியர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி குயிலம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 29). தண்டராம்பட்டு தி.மு.க. மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர், தனது செல்போனை பழுதுபார்க்க கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த கணேஷ் (26) என்பவருடன் தானிப்பாடி பஸ் நிலையத்தில் இருக்கும் மணிவண்ணன் என்பவரின் செல்போன் கடைக்கு வந்தார்.

    செல்போனை உடனடியாக சரி செய்யும்படி தி.மு.க. பிரமுகர் மிரட்டினார். கடை உரிமையாளர் மறுநாள் வந்து வாங்கிகொள்ளுமாறு கூறினார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. பிரமுகரும், அவரது நண்பரும் சேர்ந்து நாற்காலிகளை எடுத்து கடை உரிமையாளரையும், ஊழியர் ஒருவரையும் தாக்கினர். கடை உரிமையாளர் மணிவண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தம் கொட்டியது. அவர் வலியால் துடித்தார். பின்னர் ரகுபதியும், அவரது நண்பரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    திமுக பிரமுகர் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்ட செல்போன் கடை உரிமையாளர்.

    படுகாயமடைந்த கடை உரிமையாளர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. பிரமுகர் கடைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகளை கொடுத்து தி.மு.க. பிரமுகர் மீது தானிப்பாடி போலீசில் செல்போன் கடை உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. பிரமுகர் ரகுபதி மற்றும் அவருடைய நண்பர் கணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த தாக்குதல் வீடியோ காட்சிகள், பிரியாணி கடை தகராறை போல் பூதாகரமாகி வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ×