search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி தண்ணீர்"

    தூத்துக்குடி அனல் மின் நிலையம், குடிநீர் தேவை தவிர தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகள் எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #SupremeCourt #ThamirabaraniRiver
    புதுடெல்லி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலம் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் தாமிரபரணி ஆற்றின் குடிதண்ணீரை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதை எதிர்த்து தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து எந்த தொழிற்சாலைக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க கூடாது என்றும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.



    பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஜோயல் தரப்பில் மூத்த வக்கீல் அனிதா செனாய் ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் வினோத் கன்னா ஆஜரானார்கள்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ‘ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    மேலும், இந்த வழக்கில் 21-ந்தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremeCourt #ThamirabaraniRiver
    ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.



    ஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது. அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

    அதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள் கூலியும் அதிகரித்துவிட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

    எனவே, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்துவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #CentralGovernment
    நெல்லை அருகே தாமிரபரணி தண்ணீரை திருப்பி விடக்கோரி பா.ஜ.க.வினர் குளத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலந்தது. இந்த தண்ணீரை கால்வாய்கள் மூலமாக குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என பா.ஜனதா கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பா.ஜ.க.வினர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் நெல்லையை அடுத்த குறிச்சிகுளத்தில் திரண்டார்கள். தாமிரபரணி தண்ணீரை குறிச்சி குளத்திற்கு திருப்பி விட வேண்டும், குளத்தை தூர்வாரி மடைகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திடீரென குளத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். இதில் கணேஷ்குமார் ஆதித்தன், மகாராஜன், சுரேஷ், வேல் ஆறுமுகம் மற்றும் குறிச்சி குளம் ஊர் நாட்டாண்மை சண்முகவேல், கணபதி, பாண்டி, அர்ச்சுணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து பா.ஜ.க.வினர் மற்றும் கிராம மக்கள் கூறுகையில், ‘குறிச்சிகுளம் மூலமாக 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் அருகே வண்ணான் பச்சேரி, கட்டுடையார் குடியிருப்பு, புதுக்குளம் ஆகிய குளங்களும் உள்ளன. தற்போது வெள்ளம் காரணமாக தாமிரபரணியில் வீணாக சென்ற நீரை இந்த குளங்களுக்கு திருப்ப வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே நடவடிக்கை எடுக்கும் வரை பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.
    ×