search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் தேசிய கூட்டமைப்பு"

    இலங்கை அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். #SrilankaParliament #Sirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. அதன் காரணமாக ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கு எதிர்ப்பு கிளம்பவே மெஜாரிட்டியை நிரூபிக்க பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார். ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை நேற்று முன்தினம் இரவு கலைத்து விட்டார்.

    ஜனவரி 5-ந்தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இது சட்டவிரோதமானது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதிபர் சிறிசேனாவின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. அதே கருத்தைதான் அனைத்து சிலோன் மக்கள் காங்கிரசும் தெரிவித்துள்ளது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் 19-வது திருத்த சட்டத்தின் ஊடாக அது நீக்கப்பட்டு விட்டது. பாராளுமன்றத்தை அதிபர் கலைப்பதாக இருந்தால் 4½ ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும்.

    அதிபர் சிறிசேனா தன்னிச்சையாகத்தான் எடுத்த முடிவு படுதோல்வி அடைய போகின்றது என்ற அச்சத்தாலே பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச சமூகத்துக்கும் இந்த உண்மை தெரியும்.

    அதிபர் சிறிசேனாவின் அண்மைய செயல்பாடுகளை பார்க்கும்போது ரனில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருக்கக்கூடாது என்பதிலும், தான் நியமித்த புதிய பிரதமர் ராஜபக்சே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தில் தோற்கக்கூடாது என்பதிலுமே குறியாக இருந்தார்.

    ஆனால் அவரின் திட்டம் படுதோல்வியை நோக்கி செல்கையில் அந்த அவமானத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக பாராளுமன்றத்தை திடீரென கலைத்துள்ளார். அவர் தனது தன்னிச்சையான முடிவுக்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வழங்கிய ஆணையை மீறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

    சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது. அரசியல் சட்டத்துக்கு முரணானது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடினாலும் கூட அதற்கு சாதகமான முடிவு கிடைக்காது என்று பல சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஏனெனில் இலங்கை அதிபருக்கு அனைத்து அதிகாரங்கள் உண்டு. அவரால் ஒரு பெண்ணை ஆணாகவோ, ஆணை பெண்ணாகவோ மாற்ற முடியாது. அது தவிர அனைத்து அதிகாரங்களும் அவருக்கு உண்டு.

    நடைமுறையில் உள்ள பாராளுமன்றத்துடன் நாட்டின் செயல்பாடுகளை நடத்த முடியாது என அவர் கருதினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். இத்தகவலை அதிபரின் சட்ட ஆலோசகர் விஜயதாச ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

    அத்துடன் 19-வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் எந்தவொரு இடத்திலும் அதிபருக்குரிய அதிகாரம் குறைக்கப்படவில்லை. அவ்வாறு இருக்க அதிபரின் நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளார். #SrilankaParliament #Sirisena
    தமிழ் கைதிகளை விடுதலை செய்தால் பட்ஜெட் ஓட்டெடுப்பில் சிறிசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. #SriLankaGovernment #PoliticalPrisoner
    கொழும்பு:

    இலங்கை நாடாளுமன்றத்தில் வருகிற 4-ந்தேதி அதிபர் சிறிசேனாவின் அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது ஆதரவு எம்.பி.க்கள் மூலம் பட்ஜெட் ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து, சிறிசேனாவின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சிறிசேனா அரசு தப்பும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணம் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்ட ஏராளமான தமிழ் இளைஞர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த இயக்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கருணா நாட்டில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும். அப்போதுதான் பட்ஜெட் ஓட்டெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிசேனா அரசுக்கு ஆதரவாக செயல்படும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கட்சியிடம் கேட்டுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #SriLankaGovernment #PoliticalPrisoner 
    ×