search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழர் தந்தை"

    • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
    • சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக 'தினத்தந்தி' நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றி கண்ட மாமனிதர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.

    புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்து முடிசூடா மன்னராக திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
    • தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம். தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.

    தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று.
    • தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை சி.பா. ஆதித்தனார் செய்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று. தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் தான் அவரது இரு முதன்மை நோக்கங்களாக இருந்தன.

    தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவரது சமூகப் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழுக்காக சி.பா.ஆதித்தனார் செய்த அரும்பணிகள் ஏராளம்.
    • “பாரிஸ்டர்” பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள நினைவேந்தலில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 42-வது நினைவு நாளை தமிழகம் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இன்று நினைவு கூருகின்றனர். அவர் தமிழுக்காக செய்த அரும்பணிகள் ஏராளம். தமிழகச் சட்டசபையில் சபாநாயகராக இருந்து திருக்குறளை அனைவரும் அறியும்படி செய்தவர்.

    தமிழ்! தமிழ்! என்ற தாகத்தோடு பட்டித்தொட்டி எல்லாம் இருக்கின்ற பாமர மக்களும் தினத்தந்தி நாளிதழ் மூலமாக தமிழை படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர். இன்று அவரின் 42-வது நினைவுநாளை நினைவு கூருகின்றோம். அவர் தம் புகழ் ஓங்குக! வாழ்க தமிழ்! வெல்க குறள் நெறி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம ஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகர தலைவர் வாள்சுடலை, கவுன்சிலர் ஓடைசுகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் பேராசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நாடார் வியாபரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதேபோல் காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர் சி.பா.ஆதித்தனார்.
    • விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை வந்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அவருடன் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். சிங்கப்பூரிலே வழக்கறிஞராக இருந்து சிறப்பு பெற்று, லண்டனில் பத்திரிகை நிருபராக செயல்பட்டு சாதனை புரிந்தவர் அவர்.

    அந்த விதத்தில் பெரும்பொருள் ஈட்டி தமிழ்நாட்டில் பத்திரிகை ஆரம்பித்தார். மாலை முரசு பத்திரிகை அவர் தொடங்கியதுதான். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகை மூலமாக புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

    காலையில் எழுந்தவுடன் தந்தி, அதன் பின்னர் தான் காபி என்று சொல்லும் அளவுக்கு மாளிகைவாசி முதல் குடிசைவாசிகள் வரையிலும் அனைவரையும் பத்திரிகை வாசிக்க வைத்தவர் சி.பா. ஆதித்தனார்.உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர். தமிழனுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என தொடங்கியவர் அவர். இந்தியாவிலேயே அதிக மக்கள் வாசிக்கும் பத்திரிகையாக தினத்தந்தி திகழ்கிறது.

    தந்தை பெரியாரை அழைத்து சென்று தஞ்சையில் தமிழ் மாநாட்டை நடத்தினார். இதன் காரணமாக தனிச்சிறையில் வாடினார். சபாநாயகராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார். மண் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், முதலீட்டாளர் மாநாடுக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் வெற்றியோடு திரும்புவார். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. அதனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறி பேசுகிறார்கள். தனித்தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகும்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். எனது சொந்த கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மதுக்கடையை அடித்து நொறுக்கி அதனை திறக்க விடாமல் செய்தோம்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை பெருகியதன் விளைவாகவே தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியல் ஆகிவிடும். பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இந்த பேட்டியின்போது வைகோவின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மணப்படை மணி, செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, பகுதி செயலாளர்கள் கோல்டன் கான், பொன் வெங்கடேஷ், ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஆறுமுகப் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று (புதன் கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி,

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், நரசிம்மன்,

    ம.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் பிரியகுமார், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் நன்மாறன், தென்றல் நிசார், நாசர், சிக்கந்தர், அரி,

    பாரதிய ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜா,

    ஓ.பி.எஸ். அணி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் சைதை எம்.எம்.பாபு, ரட்சன் அம்பிகாபதி, மீனவர் அணி மாநில செயலாளர் கோ.சு.மணி, கிருஷ்ணன், டாக்டர் ஆதிராநேவிஸ், பிரபாகர், வீரராகவன், ஆம்னி பஸ் அண்ணாதுரை, ராயபுரம் சிவா, அஞ்சலட்சுமி

    காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.அகமதுஅலி, ஆழ்வார் தோப்பு வேலாயுதராஜா, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், மலைராஜா,

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் பாஸ்கர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் ஜெகதீசபாண்டியன், டாக்டர் இளவஞ்சி, பர்கானா, பாக்கியராஜன்,

    தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி, பகுதி செயலாளர்கள் செந்தில்நாதன், சரவணன், ரமேஷ்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உதயகுமார், வைகுண்டராஜா, வி.பி.ஐயர், புரசை நாகராஜ், சுந்தரலிங்கம், நளினி மகேந்திரன், ஆரோக்யராணி, ராபர்ட், பாலமுருகன், சுப்பிரமணி, ராஜு, அயன்புரம் செல்வராஜ், கனகராஜ், மடிப்பாக்கம் ரவி, செந்தில், செல்வன், கவிராஜ், முனிராஜ், மணிவண்ணன்,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்துராமன், சிங்கபெருமாள், நிர்வாகிகள் விஜயலட்சுமி, மைக்கேல்ராஜ், வேணுகோபால், சிவா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், நிர்வாகிகள் பழனி, ஆனந்த், உலக தமிழின பேரியக்க தலைவர் கரு.சந்திரசேகர், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின், கவுரவ ஆலோசகர் பெருமாள்,

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் மணலி தங்கம், எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், ராயபுரம் நாடார் சங்க தலைவர் எட்வர்ட் ராஜா,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட செயலாளர் சந்திரமோகன், மணலி நாடார் சங்க செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், வர்த்தக அணி துணை தலைவர் வெங்கட்ராமன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் பாலாஜி, பொருளாளர் குமரன், செயலாளர் செந்தில், தகவல் தொடர்பு பிரிவு பொருளாளர் ரவி ராஜா, இளைஞர் அணி பொருளாளர் தியாகவேல், வர்த்தக அணி துணை தலைவர் எட்வர்ட் ராஜா, கூடுவாஞ்சேரி பீட்டர்,

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகாஜன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர பாண்டியன், செல்வகுமார், பாஸ்கர், பூந்தமல்லி தொகுதி தலைவர் பூவை ராமராஜ்,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் அருணாசல மூர்த்தி, சுவைராஜா, மங்களபுரம் நாடார் ஐக்கய சங்க இணை செயலாளர்கள் செல்வ மாரியப்பன், பாலாஜி,

    அகில இந்திய நாடார் சங்க தலைவி விஜயாசந்திரன், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ்,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் சபேச ஆதித்தன், மாநில நிர்வாக குழு செயலாளர்கள் ஆறுமுக நயினார், காயல் இளவரசு, கணேசா, முல்லை ராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் பால முனியப்பன், திருச்சி நற்பணி மன்ற அமைப்பாளர் ராஜகோபால், கவுரவ ஆலோசகர் தங்கவேல்,

    சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக பொதுச் செயலாளர் சமுத்திரபாண்டி,

    வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட், நாகராஜ், துணை செயலாளர் செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், காமராஜ்,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஷேக் முகமது, சிந்தாதிரிப்பேட்டை பகுதி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கந்தவேல், பொருளாளர் ராஜேந்திரன்,

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி, பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் செந்தில்முருகன், செல்வநாயகம், செய்தித் தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், சூளைமேடு சக்திவேல்,

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், செந்தில், ராமையா, சுதாகர், ஆசைதம்பி, முபாரக், ரஜினி, செல்வம், ஜோதிட ஆசான் கீழஈரால் பண்டிதர் பச்சைராஜென் தஞ்சை தமிழ்பித்தன்.

    • "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்துவிடவில்லை!
    • ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது.

    பூமியில் பிறந்த எல்லோரையும் சிறப்புப்பெயர் சொல்லி அனைவரும் அழைப்பதில்லை! புகழுடம்போடு பூமியில் வாழ்ந்து சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கரம்சந்த் காந்தி உலகமக்களால் "மகாத்மா காந்தி" என்று அழைக்கப்பட்டார். காமராஜர் "பெருந்தலைவர் காமராஜர்"என்றும், இ.வெ.ராமசாமி நாயக்கர் "பெரியார்" என்றும், அண்ணா "அறிஞர்" என்றும், கருணாநிதி "கலைஞர்" என்றும் ஒருமனதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோல் பெரிய அய்யா சி.பா.ஆதித்தனார் தமிழ் மக்களால் "தமிழர் தந்தை" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

    இந்த "தமிழர் தந்தை" என்ற அன்பான, அறிவுப்பூர்வமான அடைமொழி பெரிய அய்யாவை எளிதில் வந்து அடைந்து விடவில்லை! அவரின் உடலில்... உள்ளத்தில்... அதன் அடித்தளத்தில்... அதன் ஆணிவேரில்... இளம் வயது முதல் இறக்கும் நாள்வரையில் உயிர்மூச்சாய் இணைந்திருந்த தமிழ்பற்றும், 'தமிழன்' என்ற நீங்காத நினைவு, முயற்சி, உழைப்பு, பாரிஸ்டர் பட்டம், பத்திரிகையாளர், நாம் தமிழர் இயக்கத் தலைவர், அரசியல், மொழிப்போர், மேலவை உறுப்பினர், பேரவைத்தலைவர், அமைச்சர், உடல் மண்ணுக்கு-உயிர் தமிழுக்கு என்ற அனைத்தும்தான் அவருக்கு "தமிழர் தந்தை" என்ற சிறப்பைத் தந்து தன்னைச் சிறப்பித்துக்கொண்டது!

    27-9-1805-ல், திருநெல்வேலி மாவட்டம் (தூத்துக்குடி) திருச்செந்தூருக்கு அருகே, காயாமொழி என்ற பிரபலமான ஊரில், சிவந்திஆதித்தனார்- கனகம் அம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவருக்கு பாலசுப்பிரமணிய ஆதித்தன் என்று பெயர் சூட்டினார்கள். அந்த சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனார், பிற்காலத்தில் தன் பெயரை சி.பா.ஆதித்தன் என்று சுருக்கிக் கொண்டார். தந்தை சிவந்திஆதித்தனார், ஸ்ரீவைகுண்டத்தில் மிகப்பெரிய வக்கீலாகப் பணியாற்றினார். தமையனார் எஸ்.டி.ஆதித்தனாரும் சிறந்த வழக்கறிஞர்தான்! எனவே தானும் படித்து வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று எண்ணிய ஆதித்தனார் சிறுவயதிலேயே படிப்பில் கெட்டிக்காரராக விளங்கினார். தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை ஸ்ரீவைகுண்டத்தில் படித்த சி.பா. ஆதித்தனார் தமிழ்மீது தாழாத பற்றும், பாசமும் கொண்டிருந்ததன் காரணமாக, அந்தக்காலத்தில் விருப்பப்பாடமாக பெரும்பாலானவர்கள் சமஸ்கிருதத்தைத் தேர்வுசெய்து படித்துக்கொண்டிருந்தாலும், தனது தமையனார் எஸ்.டி. ஆதித்தன் சம்ஸ்கிருதத்தை விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தும்கூட, தான்மட்டும் தமிழையே விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தார்.

    சின்னவயதிலேயே தமிழ்அறிவோடு, கற்பனைத்திறனும் கைவறப் பெற்றிருந்ததன் காரணமாகத் தன் பதினைந்தாம் வயதில் கல்கத்தாவில் பிரபலமாக விளங்கிய நறுமணப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையினர் தங்கள் கம்பெனி விளம்பரத்திற்கான சிறந்த கற்பனை ஓவியம் தீட்டி அனுப்பும் சிறந்த ஒருவருக்குப் பரிசு தருவதாக அறிவித்திருந்ததைக் கண்ணுற்ற அய்யா அவர்கள் தீட்டிய கருத்தோவியத்திற்கு முதற்பரிசு பெற்றார்.

    பள்ளி இறுதிவகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட சி.பா.ஆதித்தனார் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பவுதீகப் பாடப்பிரிவில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். தமிழிலும், கற்பனைத்திறனிலும் சிறந்துவிளங்கிய ஆதித்தனார் படிப்பில் சிறந்தவராகவும், விளையாட்டு வீரராகவும் விளங்கினார். கல்லூரியிலேயே ஒரு கால்பந்தாட்டக் குழுவை ஆரம்பித்து, வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார். அந்தக்குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார். அந்தவயதிலேயே அவரின் தலைமைப்பண்பு வெளிப்படத்து வங்கிவிட்டது என்பதுதான் உண்மை!

    கல்லூரியின் தமிழ் இலக்கியச் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்த ஆதித்தனார் தமிழ் இலக்கியப் புத்தகங்களை வாங்கித் தான் படித்ததோடு, சங்கத்தில் உள்ள உறுப்பினர்களையும் இலக்கியம் படிக்கவைத்தார். திருச்சியில் அவரின் தமிழ்ப்பணி தொடர்ந்தது. படிக்கும்காலத்திலேயே தமிழார்வத்தின் காரணமாக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கி 'ஆர்ட்ஸ் புக் கம்பெனி' என்ற பெயரில் அச்சகம் நடத்தி, பயனுள்ள புத்தகங்களைப் பிரசுரித்து விற்பனை செய்து பணம் சம்பாதித்தார் என்பது படிக்கின்ற மாணவர்கள் மத்தியில் சாத்தியப்படாத ஓன்று என்றாலும், ஆதித்தனாருக்கு மட்டும் எல்லாமே சாத்தியமானதாகவே அமைந்திருந்தது என்பதுதான் உண்மை!

    கல்லூரிக்காலத்தில் நடத்திய பதிப்பகத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்திற்குப் போதுமான வருமானம் வந்தது. ஆனால் அந்த வருமானத்தைத் தான் செலவு செய்யாமல், தனது லட்சியமான, தமிழ் வளர்த்தலுக்கும், விளையாட்டில் திறன்பெற்று விளங்குதற்குமே செலவிட்டார்! பி.ஏ. தேர்ச்சிபெற்றவர், அதே கல்லூரியிலேயே எம்.ஏ.யும் பயின்று, பட்டம் பெற்றுக்கொண்டு, சட்டம் படிப்பதற்காக சென்னை சட்டக்கல்லூரியில் 1928-ல், பி.எல். வகுப்பில் சேர்ந்தார். கூடவே, திருச்சியில் நடத்திவந்த அச்சுக்கூடத்தையும் சென்னைக்கு எடுத்து வந்து, அச்சகத்தில் அச்சகத்தை நிறுவி, பயனுள்ள புத்தகங்களைப் பதிப்பித்தார். இதன் காரணமாக, அக்காலத்தில் பிரபலமாயிருந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பி.ஸ்ரீ.ஆச்சார்யாவுடன் நட்பு கிடைத்தது. அவர்மூலமாக அவரின் நண்பரும், சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியருமான சி.ஆர்.சீனிவாசனிடம் பழக்கம் ஏற்பட்டது. சீனிவாசனின் மூலம் 'இந்து' ஆசிரியர் ஏ.ரெங்கசாமியின் நட்பு கிடைத்தது. கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த ஒரு மாணவரின் நட்பு வட்டம், மாணவர்களைத்தாண்டி, எழுத்தாளர்கள்... பத்திரிகையாளர்கள் எனவிரிய முடிந்ததென்றால் அது ஆதித்தனார் அவர்களின் ஆளுமைத்தன்மையால்தான் என்பதை உணரமுடிகிறது! சட்டக் கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தவருக்கு லண்டன் சென்று பார்-அட்-லா படித்தால் மதிப்பும், மரியாதையும், சம்பாத்தியமும் அதிகமாகும் என்ற எண்ணம் ஏற்பட்டதால், சட்டக்கல்லூரியில் இருந்து விலகி, லண்டன் செல்ல முடிவெடுத்தார். உடனடியாக சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசனிடம் பேசி, லண்டனில் இருந்து தான் அனுப்பும் செய்திகளைப் பிரசுரம் செய்து, தன்னை லண்டன் நிருபராக ஏற்றுக்கொள்ள அனுமதி பெற்றுவிட்டுத் தான் ஆதித்தனார் துணிச்சலாக லண்டன் சென்றார். அங்கு பாரிஸ்டர் பட்டப்படிப்பில் சேர்ந்ததோடு, லண்டன் செய்திகளை சுதேசமித்திரனுக்கு உடனுக்குடன் எழுதி அனுப்பினார். சுதேசமித்திரனோடு மட்டும் அவரின் நிருபர் பணியை நிறுத்திக்கொள்ளாமல், 'டைம்ஸ் ஆப் இந்தியா' 'ஆஜ்'என்ற உருது பத்திரிகை, இன்னும் சில ஆப்பிரிக்கப் பத்திரிகைகளுக்கும் செய்திகள் அனுப்பினார். லண்டனில் வெளிவந்து கொண்டிருந்த 'ஸ்பெக்டேட்டர்' என்ற ஆங்கில பத்திரிகைக்கும் செய்தி தந்து, தனது பாரிஸ்டர் படிப்பிற்கான முழு தொகையினையும் சம்பாதித்துக் கொண்டார் என்பது ஆதித்தனாரின் உழைப்பும், உயரிய நோக்கமும் 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டது!

    1931-ம் ஆண்டு லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வருகைதந்த 'மகாத்மா' காந்தியுடன் சென்னையில் இருந்து 'இந்து' பத்திரிகை ஆசிரியர் ரெங்கசாமியும் வந்திருந்தார். ரெங்கசாமி 'மகாத்மா' காந்தியிடம் சி.பா.ஆதித்தனாரை அறிமுகம் செய்து வைத்தார். அதனால் ஆதித்தனார் காந்தியிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றதோடு, அவரைப்பற்றிய செய்திகளையும் உடனுக்குடன் சுதேசமித்திரனுக்கு அனுப்ப முடிந்தது. ஒருமுறை காந்தி பேசிக்கொண்டிருந்த போது, பேச்சை நிறுத்திவிட்டு வெளியேறிச் சென்றவர், சிறிதுநேரம் கழித்தே திரும்பிவந்தார். அதன் காரணத்தை அவரிடமே கேட்டு, "காந்தி தனது பேச்சின் இடையேவெளியில் சென்று, ஆடிக் கொண்டிருந்த ஒரு பல்லைப் பிடுங்கிப்போட்டுவிட்டுத் திரும்பினார்" என்ற செய்தியை இந்தியாவிற்கு ஆதித்தனார் மட்டுமே அனுப்பிப் பாராட்டினைப் பெற்றார்! செய்திகளை வித்தியாசமாகச் சேகரிப்பதிலும், எழுதுவதிலும் புதுமைகள் செய்த அய்யாவைப் பத்திரிகைகளும், படிப்பவர்களும் பாராட்டினார்கள் என்பதைவிட 'மகாத்மா' காந்தியடிகளே பாராட்டினார் என்பது சிறப்பல்லவா? ஆதித்தனாரின் கட்டுரைகளும், தமிழ் எழுத்துக்களும் லண்டனில் தமிழ் ஆய்வுகள் செய்த பேராசிரியர் ஜே.ஆர்.பெர்த் என்பவரைக் கவர்ந்த தால். அவர் தயாரித்துக்கொண்டிருந்த 'தமிழ் உச்சரிப்புகள்' என்ற நூலுக்காக ஆதித்தனாரின் தமிழ் உச்சரிப்புகளை ஒலிநாடாவில் பதிவுசெய்து பயன்படுத்தினார் என்று அறியும்போது, எத்தனையோ தமிழர்களும், தமிழறிஞர்களும் இருந்தும்கூட ஆதித்தனாரே தமிழில் சிறந்து விளங்கினார் என்று தெரிகிறதல்லவா? இந்தத் தமிழுணர்வு அவருக்குள் பிறப்பிலேயே நீக்கமற நிறைந்திருந்ததால்தான் பிற்காலத்தில் தமிழ், தமிழர். தமிழ் தேசம் என்ற தீவிரமான தமிழ் லட்சியம் ஆதித்தனாரைத் தமிழகத்தின் தன்மானமிக்கத் தமிழர் தந்தையாய் மாற்றியிருக்கிறது என்று அறியத்தோன்றுகிறது.

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று 1933-ல் சென்னை திரும்பிய ஆத்தித்தனார் சிங்கப்பூரில் சென்று வக்கீல் தொழில் செய்தால் மதிப்பும், மரியாதையும், நல்ல சம்பாத்தியமும் கிடைக்கும் என்பதால் அங்கு செல்ல முடிவெடுத்தார். அதற்குள் நாடார் மகாஜன சங்கம் நடத்திய மாநாட்டின் வரவேற்பு செயலாளராகப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் மதுரையில் நடந்த அந்த மாநாட்டினை மிகச்சிறப்பாக நடத்திக்கொடுத்தார். மாநாட்டுச்செய்திகளைத் தொகுத்து, ஒரு புத்தகவடிவில் மாநாட்டில் அவர் விநியோகித்ததே பிற்காலத்தில் 'மகாஜனம்'என்ற பத்திரிகையாகி, இன்றளவும் வந்து கொண்டிருக்கிறது என்பதும் அவரின் தமிழ்த் தொண்டுகளுள் ஒன்றுதான்!

    சிங்கப்பூர் சென்று சிறப்பாக வழக்கறிஞர் தொழில் செய்துவந்த ஆதித்தனார் 'ஆதித்தன் அண்ட் கம்பெனி' என்ற பெயரில் வக்கீல்கள் குழுவமைத்துப் பெரும் மதிப்புடன் செயல்பட்டார். அங்கும் அவரின் தமிழார்வம் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கத்தூண்டியது! அங்குள்ள ஆதித்தனாரின் நண்பரான கோ.சாரங்கபாணி என்பவருக்கு,'தமிழ் முரசு'என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிப்பதற்கு ஆதித்தனார் காரணமாயிருந்தார். அந்தப் பத்திரிகை இன்றளவும் மலேசியாவில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

    கடல்கடந்தும் அய்யா ஆதித்தனார் ஆரம்பித்த 'தமிழ் முரசில்' 1987 இல் நான் எழுதிய 'ஒற்றைக் கித்தாமரம்' என்ற தொடர்கதை ஓராண்டுகாலமாகப் பிரசுரமாகி நிறைவடைந்தது என்பதை இந்தநேரத்தில் நினைவுகூர்கின்றேன். சிங்கப்பூரில் வெற்றிக்கொடிநாட்டிய ஆதித்தனார் வீட்டில்தான், தமிழ்நாட் டில் இருந்து சென்ற ஈ.வெ.ரா.பெரியார் தங்கியிருந்து, அவரின் தமிழ் கொள்கைகளைப் பாராட்டி, 'தமிழ் சீர்திருத்த இயக்கம்' என்ற அமைப்பை ஆதித்தனாருடன் சேர்ந்து ஆரம்பித்துவைத்தார் என்பது ஆதித்தனாரின் தமிழ் பற்றுக்கு எடுத்துக் காட்டல்லவா? சிங்கப்பூரைவிட்டு இரண்டாம் உலகப்போர் நடந்த 1942-ம் ஆண்டில் தமிழகம் திரும்பிய ஆதித்தனார் அதற்குப்பிறகு இந்திய வைஸ்ராயை விட அதிகமாகப்பொருளீட்டித்தந்த பாரிஸ்டர் தொழிலுக்குப் போகவே இல்லை! காந்தியடிகள் எப்படி 1919-ல் இந்தியா திரும்பியபின் தன் பாரிஸ்டர் தொழிலை மூட்டைகட்டிவைத்துவிட்டு, முழுநேர அரசியலில் தன்னலமின்றித் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாரோ அவ்வாறே ஆதித்தனாரும் பாரிஸ்டரைத் துறந்து, தமிழைக் கையில் எடுத்துக்கொண்டார். தமிழ் தொண்டாற்றவே பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆதித்தனார்.

    மதுரையில் 'மதுரை முரசு' என்ற பத்திரிகையைத் தொடங்கி, கையினாலே காகிதக்கூழ் தயாரித்து, காகிதம் செய்து, காயவைத்து, கையினால் இயந்திரம் ஓட்டி...காலம் தவறாமல் பத்திரிகையை வெளியிட்டுச் சாதனை படைத்தார். இரண்டாவதாக 'தமிழன்' என்ற பத்திரிகையைத்தான் துவங்கினார். அந்தப்பத்திரிகையின் நோக்கம் எது என்பதை அவரே எழுதியுள்ளார்.

    "அந்நியர்களுக்கு நம் நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழியவேண்டும் என்பது நமது நோக்கம்"

    துண்டுபட்டுக்கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபடவேண்டும் என்பது நமது நோக்கம்."

    தமிழனுக்கு ஆளும் உரிமை வேண்டும். அரசுவேண்டும். நாடு வேண்டும் என்பது நோக்கம்" என்பது போன்றவற்றைத் தன் தமிழ் சார்ந்த, தமிழன் சார்ந்த கோட்பாடாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் "நாம் தமிழர்" இயக்கம். அன்றைக்கு ஆதித்தனார் ஆரம்பித்த இயக்கம் இன்றும் வீறுநடை போடுகிறது என்பதுதான் அய்யாவின் தொலைநோக்கு வெற்றிப்பார்வையாகும்.

    'தமிழன்'தான் 'தந்தி'என மாறியது. அதுவே 'தினத்தந்தி'என்ற இமாலய வடிவெடுத்து இன்று இந்தியாவிலேயே அதிகப் பிரதிகள் விற்கும் நாளேடாக விளங்குகிறது. தந்தை பெரியார் தினத்தந்தி பற்றியும், ஆதித்தனார் பற்றியும் இவ்வாறு சொல்கிறார்...

    "செயற்கரிய செய்த பெரியார், ஆதித்தனார். யாருமே செய்யாத அறிய செயல்களை அவர் செய்திருக்கிறார். இதை நான்தான் நன்கு உணர்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழனுக்கு என்று ஒரு பத்திரிகை கிடையாது. ஒரு சிலர் ஆரம்பித்த பத்திரிகைகளும் தலைதூக்க முடியாமல் ஒழிந்தன. ஆதித்தனார் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்-மளமளவென்று வளர்ந்தது. எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு வளர்ந்தது. நன்றாகவே வேரூன்றிவிட்டது. இது எவ்வளவு பெரிய செயல் என்று எனக்குத்தான் தெரியும். 'நாமும் பத்திரிகை நடத்தலாம்' என்ற துணிவை மற்றவர்களுக்குக் கொடுத்தவர், ஆதித்தனார்தான். ஆகவேதான் ஆதித்தனாரை 'செயற்கரிய செய்த பெரியார்' என்று சொல்லுகிறேன்."

    எத்தனையோ போராட்டங்கள்....எத்தனையோ சிறை வாசங்கள்...அய்யா லட்சிய புருசர் என்பதால் உயரமான அந்த மனிதர் உயர்ந்து கொண்டே வந்தார். மேல்சபை உறுப்பினரானார். சட்டமன்ற உறுப்பினரானார். சட்டப்பேரவைத் தலைவர் ஆனார். ஆதித்தனார் அவைத்தலைவராக ஆன நாள்முதல் தமிழக சட்டசபை மேலும் சிறப்படையத் தொடங்கியது. சட்டசபையில் தமிழ்மணம் கமழ்ந்தது. தமிழன்னை உளங்குளிர்ந்தாள்.சட்டசபை நிகழ்ச்சிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தலாம் என்று விதி இருந்தது. ஆனால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அதை மாற்றி தமிழிலேயே நிகழ்ச்சிகளை நடத்தினார், ஆதித்தனார்.

    சட்டசபையின் வரவு செலவு திட்ட (பட்ஜெட்டு) கூட்டம் ஜூன் 17-ம் நாள் தொடங்கியது. "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற திருக்குறளின் முதலடிகளைக் கூறி கூட்ட நிகழ்ச்சிகளை தொடங்கிவைத் தார். சட்டசபைக் கூட்டம் திருக்குறள் பாடலுடன் தொடங்கியது இதுவே முதல் முறையாகும். திருக்குறளுடன் தொடங்கிய இந்தக் கூட்டம், "தமிழ்நாடு வாழ்க" என்ற நாட்டு வாழ்த்துடன் முடிந்தது.

    அவர்காலத்தில்தான் சட்டசபை விதிகள் அவரால் தமிழில் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டது! அசல் தமிழர் ஒருவர் "நாம் தமிழர்" என்றதும். "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்று அறைகூவியதும் தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் செயல் என்பதை யாரும் மறக்கவும் மாட்டார்கள். மறுக்கவும் மாட்டார்கள். தமிழகத்தின் தென் எல்லையின் தன்னிகரற்ற தலைவரைப் பற்றிச்சொல்வதானால் பக்கங்கள் நீளும்.

    பத்திரிகையுலகின் முன்னோடியான அய்யா அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களில் "பத்திரிகை எழுத்தாளர் கையேடு" என்ற தன்னிகரற்ற நூல் தமிழுக்கு இலக்கணம் வகுக்கும் தரமான நூலாகும். அரசு போற்றிப்பாதுகாக்க வேண்டிய அறிவுப்பெட்டகம்! பத்திரிகையாளர்கள் கண்டிப்பாகக் கைகளில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய கலைச்சுரங்கம்! ஆதித்தனார் எழுதிய 'தமிழ்ப் பேரரசு' தமிழ் தேசியம் விரும்பும் அனைவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூலாகும். தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் ஆதித்தனாரைப்போல தன்னலமற்று இருப்பார்களேயானால் அவர்களுக்கு என் தலைதாழ்த்தி வணங்குகின்றேன்!

    தொடர்புக்கு: rtspandy@gmail.com

    ×