search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெம்போ டிரைவர் கைது"

    நூதன முறையில் 2 1/2 டன் ரேசன் அரிசியை கடத்தியை டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய் துறை ஊழியர்கள் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தவிர அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அதன்படி ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் இன்று அதிகாலை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு டெம்போ வேகமாக வந்தது. 

    போலீசார் டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டெம்போவில் காய்கறி இருப்பதாக டிரைவர் கூறினார். மேலும் அதனை காவல்கிணறில் இருந்து தக்கலைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் டிரைவரின் பேச்சில் சந்தேகம் எழுந்ததால் போலீசார் டெம்போவுக்குள் இருந்த காய்கறி கூடைகளை கீழே இறக்கி சோதனை செய்தனர்.

    காய்கறி கூடைகள் கீழே இறக்கப்பட்ட பின்னர் அதன் அடியில் சிறுசிறு மூடைகள் இருப்பதை போலீசார் கண்டனர். அதனை திறந்து பார்த்த போது அதில் ரேசன் அரிசி இருந்தது. மொத்தம் 50 மூடைகளில் 2 1/2 டன் ரேசன் அரிசி இருந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அதனை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து டெம்போவை ஓட்டி வந்த ஏழுதேசம் நகரை சேர்ந்த டிரைவர் சுனில் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் ரேசன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×