search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் 50 பேர் கைது"

    முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னையில் இருந்து வானகரம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சிக்னல் அருகே குண்டும் குழியுமாக சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

    எனவே மதுரவாயல் குடியிருப்போர் கூட்டமைப்பு, திருவேற்காடு குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பொதுமக்கள் இதற்கு உதவ முன் வந்தனர்.

    இன்று காலை இந்த சாலையை சீரமைப்பதற்காக குண்டும் குழியுமாக இருந்த இடத்தில் ஜல்லிகற்கள், மணல் கொட்டப்பட்டன. அதைக்கொண்டு சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி சாலையை சீரமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    இதை அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முறையான அனுமதி பெறாமல் சாலையை சீரமைத்ததாக கூறி, சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட 50-க்கும் அதிகமான பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறியதாவது:-

    இது 4 வழி தேசிய நெடுஞ்சாலை. 2012-ம் ஆண்டு இதை 6 வழி சாலையாக மாற்ற அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை. ஆனால் இந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 6 வழி சாலைக்குரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த சுங்கச்சாவடியை அமைத்துள்ள ஒப்பந்ததாரர் தான் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இங்கு தினமும் ரூ.5 லட்சம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி வருமானம் வந்தும் சாலை பணி நடக்கவில்லை. மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி, தமிழக முதலமைச்சர், உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயன் இல்லை. எனவேதான் நாங்களே சாலையை சீரமைக்க முடிவு செய்தோம். அதையும் தடுத்து எங்களை கைது செய்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். நாட்டில் நிகழும் அன்றாட சம்பவங்கள் குறித்தும், தன்னை பாதித்த விஷயங்கள் குறித்தும் சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.



    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேசமயம், வேறு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமூக வலைதளமான டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan  #Twitter
    பழனி அருகே பலத்த சூறாவளி காற்றால் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது.

    பழனி:

    பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. மாலை நேரங்களில் மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு தணிந்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் தற்போது சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தெரு, மாதாரி தெரு ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    நேற்று இரவு திடீரென சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் மின் கம்பங்கள் கீழே சாய்ந்தன. இதனால் நெய்க்காரப்பட்டி, ஆர்.கலையம்புத்தூர் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின. இரவு முழுவதும் சூறாவளி காற்றால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

    பலத்த சூறாவளி காற்றால் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, ஓடுகள், குடிசைகள் பறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தனர். விடிய விடிய தூக்கத்தை தொலைத்து சாலையிலேயே நின்றிருந்தனர்.

    பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் வெளியே செல்லவும் முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். மேலும் சூறாவளிக்காற்றில் வேப்பமரம் முற்றிலுமாக சாய்ந்து அருகில் இருந்த சரக்கு வாகனத்தில் விழுந்ததில் வாகனம் முற்றிலும் சேதமடைந்தது.

    எனவே அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×