search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமின் மறுப்பு"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #PollachiAbuseCase #PollachiAssaultCase
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் - பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு ஆவார்.

    அவர் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய கோரி திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கில் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் லதா நேரடியாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    திருநாவுக்கரசை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார்.

    ஜாமின் மனு விசாரணைக்கு வந்தததை தொடர்ந்து திருநாவுக்கரசின் தாய் லதா கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அவர் கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த பொதுமக்கள் உங்கள் மகன் இப்படி செய்து விட்டாரே? என திருநாவுக்கரசு குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த லதா, எனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. அவனது செல்போனில் எத்தனை பெண்கள் படம் உள்ளதோ? அந்த பெண்களை பிடித்து விசாரணை செய்யுங்கள். என் மகன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்தவர் சபரி என்கிற ரிஷ்வந்த் (வயது 25).சிவில் என்ஜினீயர். இவர் பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். நாளடைவில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கல்லூரி மாணவியை ஊஞ்சவேலாம்பட்டியில் காத்திருக்குமாறு சபரி தெரிவித்துள்ளார். ஊஞ்சவேலாம்பட்டிக்கு தனது நண்பர்கள் வசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28) திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் சென்ற சபரி காரில் மாணவியை தாராபுரம் சாலையில் அழைத்து சென்று செல்போனில் ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

    அந்த புகைப்படத்தை காட்டி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றுள்ளனர். மேலும் மாணவியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே தாராபுரம் சாலையில் பெரியாக்கவுண்டனூர் பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.



    அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியவரை திருநாவுக்கரசு மற்றும் குழுவினர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து மாணவி பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 25-ந் தேதி காலை சபரி, வசந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோரை கைதுசெய்தனர்.

    பின்னர் 3 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் 3 பேரும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

    ஆபாச வீடியோ வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசு கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா பொள்ளாச்சி ஜே.எம்.1., கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இன்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது, அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    குற்றச்சாட்டுகளின் தன்மையின் அடிப்படையிலும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதுவதாலும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.   #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen 
    ×