search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூயஸ் நிறுவனம்"

    குடிநீர் ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்து கோவை மாநகராட்சியை முற்றுகையிட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 794 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன் முற்றுகை-மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பேராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ.., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்று திறனாளிகள் அமைப்பு உள்ளிட்டவைகள் ஆதரவு தெரிவித்து இருந்தது.

    இந்த முற்றுகை - மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் போலீசார் தடையை மீறி முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    கோவை வடக்கு மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் கூறியதாவது-

    கோவை மாநகராட்சி குடிநீர் உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 800 பக்க ஒப்பந்த நகல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சில மாற்றத்துடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் 1200 பொது குடிநீர் குழாய் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

    குடிநீர் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்படும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முற்றுகை-மறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கா நல்லூர் கிழக்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    ஆர். எஸ்.புரம் மேற்கு மண்டல அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலாளர் ராதிகா ஆகியோர் தலைமையிலும், குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகம் முன் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருப்பையா தலைமையிலும் முற்றுகை - மறியல் நடைபெற்றது.

    மறியலில் ஈடுபட்ட 178 பெண்கள் உள்பட 794 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ×