search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுதந்திர தினவிழா கொண்டாட்டம்"

    நாமக்கல்லில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    நாமக்கல்:

    சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சரியாக காலை 9.20 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

    அதை தொடர்ந்து கலெக்டர், விழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 123 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    விழாவை முன்னிட்டு தொப்பப்பட்டி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொட்டணம் தி சைல்டு பிளான் அகாடமி பள்ளி, நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 8 பள்ளிகளைச் சேர்ந்த 618 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதேபோல் புதியதாக இந்த ஆண்டு செவந்திப்பட்டி அரசு பள்ளி உள்பட 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மாலதி, முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    அரியலூரில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை கலெக்டர் விஜயலட்சுமி ஏற்றி வைத்து 39 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில், சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், ஒற்றுமையை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதைதொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 29 ஆயிரத்து 455 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கினார்.



    இதைதொடர்ந்து 6 பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளான, வாரணவாசி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் சமூக விழிப்புணர்வு நடனமும், செந்துறை தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், அரியலூர் தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், கீழப்பழுவூர் தனியார் பள்ளி சார்பில் நாட்டுப்பற்று நடனமும், கொல்லாபுரத்தில் உள்ள செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி சார்பில் தேசப்பற்று நடனமும், வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் தேசப்பற்று நடனம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மரக்கன்றுகளை மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நட்டனர்.



    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டாட்சியர்கள், துணை கலெக்டர்கள், கல்வித்துறை, வருவாய்துறை, வளர்ச்சிதுறை, காவல் துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி, வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் பாரதிராஜா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் சங்கர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் தலைமையிலும், ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் ஆனந்தவேல் தலைமையிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலும், தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையிலும் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஆண்டிமடம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் துணை வட்டாட்சியர் வேலுமணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

    இதேபோல் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக ஆண்டிமடம் நான்கு ரோடு அருகில் ஆண்டிமடம் நகர தலைவர் செல்வராசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

    திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி) கலையரசு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் இன்பராணி, இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் குமரவேல், திருமானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவர் மணிவண்ணன், காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினர்.

    இதேபோல், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கீழப்பழுவூர் சார்பதிவாளர் அலுவலகம், போலீஸ் நிலையங்களில் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டன. இதில் திரளான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடையார்பாளையம் வடக்கு நடு நிலைப்பள்ளி யில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சவுக்கத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் வரவேற்றார். பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை வாசித்தல், வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. 
    ×