search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாசி பட்டாசு ஆலைகள்"

    சுப்ரீம் கோர்ட் பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசியில் கடந்த நவம்பர் மாதம் முதல் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு, பட்டாசு உற்பத்திக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், பட்டாசு தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஆலைகளை உடனே திறக்க வலியுறுத்தி சிவகாசியில் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இன்றும் 2-வது நாளாக சிவகாசியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதலே சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். பட்டாசு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 3 மாதமாக வேலையின்றி தவித்து வருகிறோம். பலர் பிழைப்பு தேடி வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டனர்.

    இதே நிலை நீடித்தால் பட்டாசு தொழில் நலிவடையும். எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுத்து பட்டாசு ஆலைகளை திறக்க வேண் டும் என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது.
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேச தொடங்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். #PMK #AnbumaniRamadoss #ParliamentElection
    கோவை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிட்டு ஆறுதல் சொல்லாதது தமிழகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். மாற்றி அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேர்தல் வர இருப்பதால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்துவதாக அறிவிப்பார்கள். ஆனால் அதற்கான நிதி தற்போது அரசிடம் உள்ளதா? என தெரியவில்லை.

    கணினிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் 10 துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்க கூடாது. தேர்தல்நேரம் என்பதால் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும்.


    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. தகுதியான சட்டம், வலுவான சாட்சியங்களை சேகரித்து, நல்ல வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

    பட்டாசு தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ன? என்று எனக்கு புரியவில்லை. பட்டாசு தொடர்பான வழக்கை வாதாட தமிழக அரசு வழக்கறிஞர் நீதிமன்றம் கூட செல்லவில்லை. இதில் ஏதோ சதி நடக்கிறது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிலை அரசு பாதுகாக்க வேண்டும். போராடுபவர்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும்.

    விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்துவது நியாயமானது. அரசு முதலில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை.

    தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #PMK #AnbumaniRamadoss #ParliamentElection
    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #FireCrackers #RajendraBalaji
    விருதுநகர்:

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் பிரபல வக்கீல்களை வைத்து தமிழக அரசு வாதாடி வருகிறது. இதன்காரணமாக பட்டாசு தொழிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படவில்லை.


    பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்தித்து உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத, அரசியல் பேதமின்றி இங்கு கூடி உள்ளீர்கள். அனைவரும் ஒன்று கூடினால் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காத்திருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    முதல்வர், பிரதமரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விரைவில் தேங்காய், பழம் வைத்து பூஜை நடத்தி பட்டாசு ஆலைகள் திறக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #FireCrackers #RajendraBalaji
    கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு ஊழியர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #FireCrackers
    விருதுநகர்:

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கடுமையான விதிகளால் பட்டாசு தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டது. விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பட்டாசு ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பட்டாசு அதிபர்கள், தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

    சிவகாசி பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    மேலும் இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம், பட்டாசு உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஊழியர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து வேன், கார் மூலம் விருதுநகருக்கு பேரணியாக வந்தனர்.

    தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூடினர். பின்னர் அவர்கள் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    சிறிது நேரத்தில் பட்டாசு தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலெக்டர் சிவஞானத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    விருதுநகரில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் திரண்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் மேற்பார்வையில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    போராட்டம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் எட்டயபுரம் 4 வழிச்சாலைக்கு திருப்பி விடப்பட்டது.

    மதுரையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மண்டேலா நகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக திருப்பி விடப்பட்டது. #FireCrackers #VirudhunagarCollectoroffice
    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்திக்கு போடப்பட்டுள்ள தடைகளை தகர்த்தக்கோரி சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.

    பட்டாசு ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி, அச்சம் தவிர்த்தான், திருவேங்கடம், திருவேங்கடபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசு ஆலையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாதர்சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் வருகிற 22-ந்தேதி போராட்டம் நடத்துகின்றனர்.
    விருதுநகர்:

    காற்று, ஒலி மாசுபாட்டை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    குறிப்பாக பண்டிகை காலங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளை தயாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தொழிற்சாலைகளில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று அறிவித்துள்ளன.

    இந்த நிலையில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பட்டாசு தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி 3 லட்சத்துக்கும் அதிகமான பட்டாசு தொழிலாளர்களை திரட்டி வருகிற 22-ந்தேதி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பிரச்சனைக்கு தீர்வு காண முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். பிரதமரை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன். மேலும் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி அளித்தார்.
    காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.

    மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

    மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் பழனிசாமி  அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.


    தற்போது கூட சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, இத்தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை இருக்கின்றபொழுது, டெல்லியிடம் இணக்கமாக இருக்கும் பழனிசாமி  அரசு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றிருக்கலாம்.

    தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #TTVDhinakaran
    ×