search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் கடத்தல்"

    • சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் சிலை கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது அம்பலமாகி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்ட விலை மதிக்கமுடியாத பழங்கால சிலைகளை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று கோடிக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் தற்போது சிறை தண்டனை பெற்று, தமிழக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரால் கடத்தி செல்லப்பட்ட கிருஷ்ணர் சிலை ஒன்று தற்போது அமெரிக்காவில் உள்ள எச்.எஸ்.ஐ. என்ற அமைப்பிடம் உள்ளதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த சிலை காளிங்கன் என்ற 5 தலை பாம்பின் மேல் கிருஷ்ணர் நடனமாடுவதைப்போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி செல்லப்பட்டு, ரூ.5.2 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதும் அம்பலமாகி உள்ளது. சோழர் காலமான 11-12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா கடத்தி சென்றுள்ளனர்.

    இந்த சிலை தமிழ்நாட்டில் உள்ள எந்த கோவிலில் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன், சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார், கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

    விலை மதிக்கமுடியாத இந்த நடனமாடும் கிருஷ்ணர் சிலையை அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது.
    • மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் என்ற பழமைவாய்ந்த சிவன் கோவில் இருந்தது. வெளிநாட்டினர் படையெடுப்பால் இந்த கோவில் சிதைந்தது. பின்னர் அந்த கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேகரித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இதில் கடந்த 2000-ம் ஆண்டு தொன்மையான முருகன் கற்சிலை திருட்டு போனது. அப்போது இதுபற்றி போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

    தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொன்மையான பல சிலைகளை மீட்டு வரும் தகவலறிந்து முருகன் சிலை காணாமல் போனது குறித்து தச்சூர் மக்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அப்பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், தச்சூர் சிவன் கோவிலில் இருந்து திருடுபோன, நின்ற நிலையில் உள்ள முருகன் கற்சிலை அமெரிக்க நாட்டின் உள்பாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை மத்திய அரசு உதவியுடன் மீட்டு தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    • தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.
    • தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    சென்னை:

    சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், 7-வது மெயின்ரோடு, 1-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் சோபா துரைராஜன். இவரது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இவரும் கணவருடன் அமெரிக்காவிலேயே வாழ்கிறார். இவரது சென்னை வீட்டில் பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே டிசம்பர் 9-ந்தேதி அன்று அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்து 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக கடந்த ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது தோண்ட தோண்ட புதையல் வருவது போல அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கல் சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    3-வது முறையாகவும் அந்த வீட்டில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு போலீசார் திட்டமிட்டார்கள். இதற்காக கோர்ட்டில் அனுமதி பெறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அங்கு சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் ஆகியோர் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஷ்பாபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ராமர், வள்ளி, தெய்வானை இணைந்த முருகன், நந்தி உள்ளிட்ட 14 பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டது.

    பிரபல சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரிடம் இருந்து, கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து மேற்கண்ட சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும், போலீஸ் விசாரணையில், சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பிட்ட வீடு தரைதளம், முதல் தளம் மற்றும் 2-வது தளம் என்ற 3 பகுதிகளை கொண்டது. அந்த வீட்டில் சோபா துரைராஜனின் வயது முதிர்ந்த 4 உறவுப்பெண்கள் மட்டும் தற்போது வசிப்பதாகவும், திரும்பிய திசை எல்லாம், அந்த வீட்டில் சிலைகள் மற்றும் கலைப்பொருட்களாக காட்சி அளிப்பதாகவும் போலீசார் கூறினார்கள்.

    இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டதால், இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை, என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்தப்படும், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோபா துரைராஜன் வீட்டில் இதுவரை கைப்பற்றிய சிலைகள் உள்ளிட்ட விலை மதிக்க முடியாத கலைப்பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • வாகன தணிக்கையில் 2 பேர் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் தீவிர விசாரணை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×