search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தப்பா கைது"

    மும்பையில் 7 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். #Mumbai #ManHeld #Murder
    மும்பை:

    மும்பை பைகன்வாடி ரபீக் நகரை சேர்ந்த சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி(வயது7). கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் தேவ்னார் தியோனர் சொசைட்டி பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனை அவனது சித்தப்பா முகமது நவ்சத் அலாவூதின் அப்பாசி(22) என்பவருடன் பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சிறுவனை அவர் தான் கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் மற்றும் மனைவி திட்டி வந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக முகமது இர்பான் அஸ்காரலியை கடத்தி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Mumbai #ManHeld #Murder

    பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கு ஊட்டி குன்னூரை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கங்காதரன் உயிரிழந்து விட்டார். இதனால் ஜோதிலட்சுமி குழந்தைகளுடன் குருந்திரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அவரின் 15 வயது மகள் ராஜேந்திரபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, தனது சைக்கிளில் சென்றுள்ளார். மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களும் வீடு திரும்பிய நிலையில் ஜோதிலட்சுமியின் மகள் வீடு திரும்பவில்லை. இதனால் உடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரித்தபோது மகள் குறித்தஎந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே ஊட்டி குன்னூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் மாணவி இருப்பதாக ஜோதிலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் உறவினரான ரமணிதரன் (39) என்பவர் மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-

    ஊட்டி குன்னூரை சேர்ந்த ரமணிதரன், ஜோதிலட்சுமியின் கணவரான கங்காதரனின் தம்பி என்பதும், தனது அண்ணனின் மகள் தனக்கும் மகள் என்ற உறவு பாராமல் ரமணிதரன் 15 வயதான பள்ளி மாணவி மீது காதல் வயப்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை எப்படி யாவது அடைந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார். அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 3-ந் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து நலம் விசாரித்துள்ளார். மாணவியும் தனது சித்தப்பா என்பதால் சூழ்ச்சியை உணராமல் சாதாரணமாக பேசியுள்ளார். பின்னர் தன்னுடன் ஊட்டிக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து தான் தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவரை மிரட்டி குன்னூருக்கு கடத்தி சென்றார்.

    பின்னர் தனது பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் மாணவியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, குன்னூரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்ட போலீசார், ரமணிதரன் மீது ஆள்கடத்தல், சிறுமியை மிரட்டி திருமணம் செய்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    சேலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை சித்தப்பா கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் மீனா(வயது 17).

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு தந்தையும், தாயும் இறந்ததை தொடர்ந்து மீனா மல்லூரில் உள்ள கஸ்தூரியின் தாய் வீட்டில் தங்கியிருந்தார். அழகேசனின் தந்தை குப்புசாமி, தாய் தீர்த்தம்மாள் ஆகியோர் கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன் மீனா வந்தார். இவர்களுடன் மீனாவின் சித்தப்பா வீராசாமி(45) என்பவரும் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று காலை வீட்டிற்குள் மீனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலை வீட்டிற்குள் வீரசாமி இருந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கு பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த தீவட்டிப்பட்டி போலீசார், வீராசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மீனாவை வீராசாமி கொலை செய்தது தெரியவந்தது.

    மீனாவை கொலையை செய்தது ஏன்? என்பது குறித்து வீராசாமி பரபரப்பு வாக்குமூலம் போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் காவலாளி வேலை பார்த்தேன். இரவு நேரத்தில் வாட்ச்மேன் பணி என்பதால் எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. இதனால் நான், கொஞ்சம் நாட்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு விட்டேன்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் என் அண்ணன் அழகேசன் மகள் மீனா மல்லூரில் இருந்து புறப்பட்டு தனது தாத்தா-பாட்டியை பார்ப்பதற்காக கஞ்சநாயக்கன்பட்டி காலனிக்கு வந்தார்.

    எங்களுக்கு சொந்தமாக பழைய வீடு ஒன்றும், புதிய வீடு ஒன்றும் உள்ளது. பழைய வீட்டில் எனது அப்பா குப்புசாமி வசித்து வருகிறார். புதிய வீட்டில் நானும், எனது அம்மா தீர்த்தம்மாள் மற்றும் மீனா ஆகியோர் வசித்து வந்தோம்.

    ஏற்கனவே எனது பழக்க, வழக்கங்கள் சரியில்லை என்பது பற்றி மீனாவுக்கு தெரியும். அதனால் அவர் என்னிடம் மட்டும் பேசமாட்டார். ஊரில் உள்ள மற்ற பசங்களிடம் மீனா ஜாலியாக பேசுவார். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.

    மல்லூரில் வசித்து வரும் அவரது தாத்தா-பாட்டிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீனா போன் செய்து ஊருக்கு வருகிறேன். சித்தப்பா என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இங்கு இருப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். அவர்களும் மீனாவிடம் உடனே புறப்பட்டு மல்லூருக்கு வா என அழைத்தனர்.

    இந்த நிலையில் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் அவரிடம், குப்புசாமி, தீர்த்தம்மாள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் கோவில் திருவிழா வருடத்திற்கு ஒருமுறைதான் நடக்கிறது. எனவே, திருவிழாவை பார்க்க ஆசைப்பட்டு வந்த நீ, திருவிழா முடிந்த பிறகு மல்லூருக்கு போகுமாறு கூறினார்கள். இதனால் திருவிழா முடிந்த பிறகு மீனா மல்லூருக்கு போவதாக இருந்தார்.

    திருவிழா முடிவதற்குள் மீனாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என நான் முடிவு செய்தேன். நேற்று காலையில் குளித்து விட்டு மீனா வீட்டுக்குள் வந்தார். அவளை பார்த்ததும் எனக்கு காமவெறி தலைக்கேறியது. அவளை அடைய இது தான் சரியான நேரம் என நினைத்தேன். ஆசைக்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    அப்போது வேறு பசங்களிடம் ஜாலியாக பேசுகிற. அதே மாதிரி என்கிட்ட பேசு, என்னை லவ் பண்ணு.. என் கிட்ட வா என சொன்னேன்.

    அந்த சமயத்தில் எனது அம்மா பாத்திரங்களை கழுவி எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு பக்கத்தில் உள்ள பழைய வீட்டுக்கு சென்றார். அம்மா வெளியே சென்றது எனக்கு சாதகமாக அமைந்தது.

    இதனால் நான் கதவை சாத்தி விட்டு, மீனாவை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

    அப்போது இது பற்றி அவள் வெளியே சென்று தாத்தா- பாட்டியிடம் சொல்லி விடுவேன் என மிரட்டினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    கதவை திறந்து விடுங்கள், வெளியே போக வேண்டும் என அவள் சத்தம் போட்டாள். நான் முடியாது என்றேன். யாராவது வீட்டிற்குள் வாருங்கள். கதவை திறந்து என்னை காப்பாற்றுங்கள் என்று பயங்கரமாக சத்தம் போட்டாள்.

    இது எனக்கு மேலும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மீனாவின் கழுத்தை ஓங்கி வெட்டினேன். இதில் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    மீனா சத்தத்தை கேட்டு ஊர் மக்களும், பழைய வீட்டில் இருந்த எனது அம்மா, அப்பாவும் அங்கு பதட்டத்துடன் ஓடி வந்தனர். அப்போது நான் கொடுவாளுடன் வீட்டில் இருந்து வெளியேறி, எனக்கு ஒத்துவரல.. அதனால் போட்டு தள்ளி விட்டேன் என ஊரில் கூறிக் கொண்டே ஓடி தலைமறைவானேன். போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    ஏற்கனவே வீராசாமி ஊரில் ஆண்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கதவை தட்டுவார். பல பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். அவரை ஊர் மக்கள் பிடித்து எச்சரித்ததும், பெண்கள் குளிக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் மறைவாக இருந்து எட்டி பார்த்தது வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    வீராசாமி மீது கொலை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். #Tamilnews
    ×