search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்ட நிபுணர்கள்"

    சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு கொடுத்திருக்கும் கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாசை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதற்காக விரைவில் கருணாசுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்கக்கோரி தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கருணாஸ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நேற்று 2 மனுக்களை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளதால் அவர் சார்பில் அவரது வக்கீல் அழகிரி மனுக்களை கொடுத்தார்.

    முதல் மனுவில், “சபாநாயகர் தனபால் அரசியல் சட்டப்படி செயல்படவில்லை. அவர் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான தீர்மானத்தை அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில், “தமிழ்நாடு சட்டபேரவை விதி 68-ன்படியும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 179(சி)படியும் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்கான தீர்மானம் கொண்டுவர விரும்புகிறேன். இதை பேரவை அலுவல்களில் சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



    கருணாஸ் அளித்துள்ள இந்த மனுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இந்த மனுக்கள் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், “ஒரு எம்.எல்.ஏ. சபாநாயகரை பதவி நீக்க கோரி தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால் கட்சி தலைமைக்கு தான் முதலில் பரிந்துரைக்க வேண்டும். அதை விடுத்து பேரவை செயலகத்தில் மனு கொடுக்க கூடாது.

    அவ்வாறு மனு அளிக்கும் பட்சத்தில் அவர் கட்சி விதிகளை மீறுவதாக அர்த்தம். அந்த அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார். அதன்படி பார்த்தால் கருணாஸ் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற தனிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அவர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே சபைக்குள் அவர் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ. என்றே கருதப்படுகிறது.

    ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகரை பதவி நீக்க செய்யக்கோரி மனு கொடுப்பது அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சி விரோத நடவடிக்கையாக கருதப்படும். எனவே இதை அடிப்படையாக வைத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்படி கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை மிக எளிதாக அ.தி.மு.க. தலைவர்களால் பறிக்க முடியும் என்று பெரும்பாலான சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கருணாஸ் கொடுத்த கடிதம் அவருக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு 1972-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது சபாநாயகராக இருந்த கே.ஏ.மதியழகன் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்தார். அதாவது எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.

    இதையடுத்து அவர் மீது ஆற்காடு வீராசாமி பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மூலம் சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டார்.

    தமிழக சட்டசபை வரலாற்றில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்தது அப்போதுதான். அதன் பிறகு எந்த சபாநாயகரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

    கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அப்போதைய தி.மு.க. சபாநாயகர் ஆவுடையப்பனை பதவி நீக்க கோரி 2 தடவை தீர்மானம் கொண்டு வந்தது. அந்த 2 தீர்மானங்களும் தோல்வியை தழுவின.

    அதுபோல கடந்த ஆண்டு சபாநாயகர் தனபாலை பதவி நீக்க செய்யக்கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.

    தற்போது தனபால் மீது 2-வது முறையாக பதவி நீக்கக் கோரி தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடவை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவரே மனு கொடுத்துள்ளார். தி.மு.க. அவருக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதற்கு சட்டசபை நிகழ்வு தான் விடை தரும். #Karunas #Speaker
    7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. #Perarivalan #RajivGandhiCase #banwarilalpurohit
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    பிறகு அவர்களது தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.கடந்த 27 ஆண்டுகளாக இவர்கள் ஜெயிலில் உள்ளனர்.

    இவர்கள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசே இது தொடர்பான முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

    அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதோடு 3 நாட்களில் மத்திய அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் 7 பேரையும் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார்.

    தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து இருப்பதால், இதில் முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு கூறியது.

    இதனால் இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே சட்ட ரீதியில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.

    கடந்த 6-ந் தேதி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது. ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இது பற்றி ஆலோசிக்க நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த பரிந்துரை நேற்றே உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்த பரிந்துரை கவர்னர் கையில் உள்ளது.

    கவர்னர் இந்த பிரச்சினையில் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவை முடிவு செய்து பரிந்துரைப்பதை கவர்னர் ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உள்ளது. அமைச்சரவை முடிவை கவர்னர் நிராகரிக்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    எனவே கவர்னர் தனது முடிவை எப்போது அறிவிப்பார் என்ற ஆவல் கலந்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இந்த வி‌ஷயத்தில் கவர்னர் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனது நிலைப்பாட்டை தெரிவிப்பாரா? அல்லது மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்டு தலையாட்டுவாரா என்ற கேள்விக்குறி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 4 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த 4 விதமான முடிவுகள் வருமாறு:-

    1. தமிழக அமைச்சரவை பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டு 7 பேரை விடுதலை செய்ய உடனே உத்தரவிடலாம்.

    2. அமைச்சரவை பரிந்துரை மீது கவர்னர் முடிவு எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. எனவே கவர்னர் பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை சிறிது நாட்கள் கிடப்பில் போடலாம். அவர் மேலும் கால தாமதமும் செய்யலாம்.

    3. முன்னாள் பிரதமரை படுகொலை செய்துள்ள மிக முக்கியமான வி‌ஷயம் என்பதால் 7 பேரை விடுதலை செய்வது பற்றி மத்திய அரசிடம் கவர்னர் யோசனை கேட்கலாம்.



    4. தமிழக அமைச்சரவை எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய கவர்னர் உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது.

    இந்த 4 விதமான முடிவுகளில், எந்த முடிவை எடுப்பது என்பது பற்றி கவர்னர் பன்வாரிலால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையை தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே கவர்னர் முடிவு விரைவில் தெரியும் என்று கூறப்படுகிறது. #Perarivalan #RajivGandhiCase
    தமிழக அரசு உத்தரவு மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #SterlitePlant
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியது.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. காற்று, நீர், பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆலையை மூட அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

    அரசியல் சாசன சட்டம் 48-ஏ பிரிவின்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதிக்கப்பட்டால் மாநில அரசு இந்த விவகாரத்தை சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட ஆலையை மூடுவதற்கு உத்தரவிடலாம். இந்த அதிகாரத்தின் மூலம்தான் இப்போது ஆலையை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    ஆனால், இந்த உத்தரவு மூலம் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றால் அரசின் உத்தரவு நிற்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

    இது சம்பந்தமாக சுற்றுச்சூழல் சட்ட நிபுணரும், வக்கீலுமான ரித்விக் தத்தா கூறியதாவது:-

    காற்று, தண்ணீர் மாசு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆலையை மூட உத்தரவிடும் போது அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். ஆதாரங்கள் அடிப்படையில் தான் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.

    ஆனால், தமிழக அரசு அதற்கான உரிய ஆதாரங்களை வைத்திருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்லும் போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் அனைத்து ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதுவும் போதுமான ஆதாரங்கள் அதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தடை உத்தரவை நிரந்தரமாக்க முடியும்.

    ஏற்கனவே இந்த விவகாரங்கள் கோர்ட்டிலும், மத்திய பசுமை தீர்ப்பாயத்திலும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கோர்ட்டில் இதன் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆதாரங்கள் நிச்சயமாக சமர்பிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் ஆலையை நிரந்தரமாக மூட முடியாது.

    2013-ம் ஆண்டு இதே போல் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், கோர்ட்டுக்கு சென்று உத்தரவை ரத்து செய்ய வைத்தனர். அந்த நிலை இப்போதும் தொடருமானால் அரசு தடை நீடிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2013-ம் ஆண்டு ஆலையில் இருந்து வி‌ஷவாயு கசிவதாகவும், இதனால் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கொடுத்தனர்.

    இதையடுத்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டது.

    இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆலை சார்பில் கொண்டு சென்றனர். ஆனால், பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் போதிய ஆதாரங்களை வழங்க முடியவில்லை.

    எனவே, அப்போது பசுமை தீர்ப்பாயம் ஆலையை நடத்த அனுமதி அளித்தது. பசுமை தீர்ப்பாயம் 145 பக்கத்துக்கு தீர்ப்பு வழங்கி இருந்தது.

    அதில், ஆலை எவ்வாறு செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது பற்றி எல்லாம் தெளிவாக கூறப்பட்டு இருந்தது. அதை மீறி இருக்கிறார்களா? என்பதை ஆதாரத்துடன் கூறினால்தான் மூட உத்தரவிட்டது செல்லும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சல்பர் டை ஆக்சைடு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெளியேறுவதாக கேர் ஏர்சென்டர் என்ற அமைப்பு கண்டுபிடித்து கூறியது.

    அதாவது சல்பர் டை ஆக்சைடு 477.53 பி.பி.எம். அளவுக்கு வெளியேற்ற அனுமதி உள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் 803.5 பி.பி.எம்.மில் இருந்து 1123.6 பி.பி.எம். வரை வெளியேற்றப்பட்டதாக அந்த அமைப்பு கூறியது.

    ஆனால், ஸ்டெர்லைட் ஆலை இதை மறுத்தது. தங்கள் ஆலையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியில் சல்பர்டைஆக்சைடு வெளியேற்றம் மிக குறைவாக இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

    மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அக்டோபர் 2012-ல் இருந்து மார்ச் 2013 வரை எடுத்த ஆய்வில் அனுமதிக்கப்பட்டதை விட 84 மடங்கு மாசு அதிகமாக இருப்பதாக கூறி இருந்தது.

    ஆனால், இந்த வாதங்கள் எதுவும் பசுமை தீர்ப்பாயத்தில் எடுபடவில்லை. பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து ஆலையை திறக்க உத்தரவிட்டது.

    மேலும் தற்போது ஆலை மீதான வழக்கு கோர்ட்டில் நிலுவையிலும் இருக்கிறது. எனவே, தற்போதைய உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை கோர்ட்டுக்கு செல்லும்.

    ஆலையை மூட உத்தரவிட்டதற்கான காரணங்களை உரிய ஆதாரத்துடன் நிரூபிப்பது கடினம். எனவே, ஆலையை மீண்டும் இயக்க கோர்ட்டு உத்தரவிடுவதற்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். #SterlitePlant
    ×