search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மேயர்"

    • வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
    • 100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மணியகாரம்பாளையம் கக்கன் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். தி.மு.க நிர்வாகியான இவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை 19-வது வட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருக்கிறேன். மணியகாரம்பாளையத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தள்ளு வண்டியில் இரவு நேரத்தில் 2 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வருகிறேன்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயரின் கணவர் ஆனந்தகுமார் எனது கடைக்கு வந்தார். அப்போது அவர் என்னிடம், நான் கடை நடத்தி வரும் இடத்திற்கு வாடகையாக ஒரு தொகையினை கேட்டார்.

    எனது குடும்பமே இந்த கடையில் இருந்து வரும் வருமானத்தில் தான் ஓடுகிறது. அப்படி இருக்கையில் நான் எப்படி பணம் கொடுப்பது என தெரிவித்தேன்.

    அதற்கு அவர், பக்கத்தில் இருக்கும் கழிவறையை பராமரித்து, அதில் கட்டணம் வசூலித்து கொள்ளுங்கள். மாதம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு மீதியை நீங்கள் வருமானமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினார். இலவசமாக கட்டப்பட்டு உள்ள கழிப்பிடத்துக்கு பணம் வசூலித்தால் நான் மாட்டிக்கொள்வேன் என்பதால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் மாநகராட்சி ஊழியர்களை வைத்து எனது தள்ளுவண்டி கடையை எடுத்து கொண்டு போய்விட்டார். மேலும் எனக்கு மிரட்டலும் விடுக்கின்றனர். எனக்கு பாதுகாப்பு இல்லை. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    வியாபாரி அளித்த புகாரின் உண்மைத் தன்மையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்று காலை தி.மு.க நிர்வாகியான ரங்கநாதனுக்கு ஒரு போன் வந்தது. அதில் நாங்கள் மாநகராட்சியில் இருந்து பேசுகிறோம். உங்கள் தள்ளுவண்டியை நீங்கள் வைத்திருந்த இடத்திலேயே வைத்து விட்டோம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தள்ளுவண்டி நின்றிருந்தது. இதை பார்த்து அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

    புகார் தொடர்பாக மேயர் கல்பனா கூறியதாவது:-

    100 வார்டுகளிலும் ரோட்டோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றி வருகிறார்கள். தொட்டதெற்கெல்லாம் எனது கணவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    கக்கன் வீதியில் மாநகராட்சி கழிப்பறை சிதிலமடைந்து இருந்தது. அங்கு ஒருவர் கட்டில் போட்டு படுத்து கொண்டு கட்டணம் வசூலித்தார். கழிப்பறைக்கு அருகே ஸ்டாண்ட் வைத்து கொண்டு எப்போதும் 4 பேர் நிற்கின்றனர். பெண்கள் எப்படி அங்கு வருவார்கள்.

    தள்ளுவண்டியை இரவில் நடத்தி விட்டு பகலில் எடுத்து செல்ல வேண்டும். ஆனால் அவர் நிரந்தரமாக அங்கு கூடாரம் அமைத்து ஆக்கிரமித்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. தற்போது மாநகராட்சி அலுவலர்கள் சென்று அகற்றி உள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு எனது கணவரை காரணம் சொல்கிறார்கள். தவறான தகவல்களை பரப்புகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
    • கோவையில் மேயரின் கணவர் வாரச்சந்தை வசூல் தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சி மேயராக கல்பனா உள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார்.

    கோவை மணியக்காரன்பாளையத்தில் கோவிலுக்கு அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சந்தை கடை போடுபவர்களிடம் தனி நபர் ஒருவர் கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று கட்டணம் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த கட்டணத்தை இனி தனது ஆட்கள் வசூலிப்பார்கள் என செல்போனில் மேயரின் கணவர் ஆனந்தகுமார் கூறுவது போல் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    இந்த ஆடியோவில், குமார், சம்பத் ஆகியோர் பேசுகின்றனர். அதில் குமார் என்பவர், சம்பத்திடம், உங்களிடம் ஆனந்த் அண்ணா பேச வேண்டும் என்று தெரிவிக்கிறார். அவரிடம் போனை கொடுக்கிறேன் என கூறுகிறார்.

    அப்போது ஆனந்த குமார் எதிர்முனையில் இருக்கும் சம்பத்திடம், அடுத்த வாரத்தில் இருந்து சந்தை கடையில் நம்ம ஆட்கள் வசூல் செய்துகொள்வார்கள். நீங்கள் வசூல் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்.

    அதற்கு எதிர்முனையில் பேசுபவர் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் கோவில் கமிட்டியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார். அதற்கு கோவில் கமிட்டியிடம் நாங்கள் பேசிக்கொள்கிறோம். சனிக்கிழமை நீங்கள் வசூலிக்க வேண்டாம் என்று ஆனந்த குமார் சொல்வது போன்று ஆடியோ நிறைவடைகிறது.

    இந்த ஆடியோ வேகமாக பரவி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் ஆட்சி அதிகாரத்தில் தலையிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

    இந்தநிலையில் கோவையில் மேயரின் கணவர் வாரச்சந்தை வசூல் தொடர்பாக பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த ஆடியோ விவகாரத்தை மேயருக்கு பிடிக்காத சிலர் தி.மு.க.வின் மேலிடத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேயரிடம் கட்சி மேலிடம் விசாரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் மேயருக்கு இந்த விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து மேயரின் கணவர் ஆனந்த குமார் கூறியதாவது:-

    மணியக்காரன்பாளையத்தில் கோவில் இடத்தில் வாரச்சந்தை அமைத்து, கடைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் அது கோவில் இடம் இல்லை என்பதும், வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டை பகுதி என்பதும் தெரியவந்தது.

    ஆனால் சிலர் அதனை கோவில் இடம் என்று கூறி பணம் வசூல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி தகவல் வந்ததும், அந்த பகுதியை சேர்ந்தவன் என்ற முறையில் நான் விசாரித்தேன். அப்போது கோவில்காரர்கள் வசூலிக்கவில்லை என்பது தெரியவந்தது.

    கோவில் இடம் என்றால் கோவில்காரர்கள் வசூல் செய்துகொள்வார்கள் என்று கடந்த 3 ஆண்டுகளாக பேசி வருகிறோம். இது தொடர்பாக நேரில் தான் பேசினோம். போனில் எதுவும் பேசவில்லை. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் நான் மேயரின் கணவர் என்பதால் இதனை சிலர் அரசியலாக்கி, இந்த சம்பவத்தை பெரிதாக மாற்றி விட்டனர். மேலும் நான் பேசாததை பேசியதாக கூறி ஆடியோவையும் பரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த சில தினங்களாக நான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×