search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள் சிக்கினர்"

    குமரி மாவட்டத்தில் 5 இடங்களில் கொள்ளையடித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியை அடுத்த ஏழு சாட்டுப்பத்து பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கட்டிட தொழிலாளி. கூடங்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40) மற்றும் குழந்தைகள் ஏழு சாட்டுப்பத்துவில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தனர். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டின் பின்பக்க கதவு திறந்துகிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 2 1/2 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜன்னல் வழியாக கம்பிமூலம் பின்பக்க கதவை திறந்து உள்ளே வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அதில் கொள்ளையனின் ஒரு கை ரேகை சிக்கியது.

    அருமனை வீராலிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (40). இவர் சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் அதிகாலை எழுந்து பார்க்கும்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் மேஜையில் உள்ள டிராயர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 1/2 பவுன் தங்க செயின், 2 பவுன் தங்க வளையலும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை காரோடு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் நாயர். இவர் மாங்கோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மாங்கோட்டில் கடை ஒன்று உள்ளது.

    சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு மறுநாள் காலை மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது கடையில் இருந்த ரூ.52 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வல்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    அருமனை கீழ மாங்கோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிலா (33). இவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இரவு விஜிலா மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 மோதிரங்களை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். காலையில் விஜிலா எழுந்து பார்க்கும் போது சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அருமனை காரோடு பகுதியை சேர்ந் தவர் ராஜு (44). இவர் நாரகத்தின்குழி பகுதியில் கடை நடத்தி வருகிறார். கடையை பூட்டிவிட்டு சென்ற அவர் மறுநாள் மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு கடையில் இருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அருமனை போலீசில் புகார் செய்தார். இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடங்களில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×