search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல் மலையில் வாலிபர் கொலை"

    கொடைக்கானல் மலையில் கொலை செய்யப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட வாலிபர் உடலை 3-வது நாளாக மீட்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மதுரை ஜெய்ஹிந்த் புரம் சோலை அழகுபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருடன் 4 பேர் கொடைக்கானலுக்கு கடந்த 24-ந் தேதி சுற்றுலா வந்தனர். மணிகண்டன் என்பவருக்கும் அவரது நண்பர் சீனிவாசன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டனை கொலை செய்யும் நோக்கில் சீனிவாசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சபரி, மகாராஜன், சரவணன், ஆகியோர் கொடைக்கானலுக்கு அழைத்து வந்தனர்.

    வட்டக்கானல் பகுதியில் அவர்கள் தங்கி இருந்து விட்டு இரவு விடுதியில் மது அருந்தினர். பின்னர் மணிகண்டனை கொலை செய்து பாம்பார்புரத்தில் 3 ஆயிரம் அடி பள்ளத்தில் தூக்கி வீசினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் மதுரைக்கு திரும்பி விட்டனர்.

    இதனிடையே மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை காணாமல் திடுக்கிட்டு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் நண்பர்களே அழைத்துச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் வீசிச் சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த 2 நாட்களாக கொலை செய்யப்பட்ட மணிகண்டன் உடலை தேடி வந்தனர்.

    வட்டக்கானல் பகுதியில் 1,000 அடிக்கு கீழ் பாறைகளின் இடுக்கில் மணிகண்டன் உடல் கிடந்ததை நேற்று இரவு உறுதி செய்தனர். ஆனால் வெளிச்சம் இன்மை காரணமாகவும், சாரல் மழை பெய்ததாலும் அவரது உடலை மேலே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து உடலை எடுத்து வருவதற்கான உபகரணங்கள் அனைத்தும் அதே இடத்தில் வைத்து விட்டு அவர்கள் மேலே ஏறினர். இன்று காலையில் மீண்டும் 1,000 அடி பள்ளத்தில் சிக்கியுள்ள மணிகண்டன் உடலை மேலே கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் பிரச்சினையில் துணை நடிகை விஷ்ணுபிரியாவின் காதலன் பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டு மலையில் வீசப்பட்டார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொடைக்கானல் நகர மக்களையும் சுற்றுலா பயணிகளையும் பீதியடைய வைத்துள்ளது.

    இயற்கையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் இது போன்ற கொலைக்களமாக மாறி வரும் கொடைக்கானல் பகுதிக்கு வர அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×