search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா ஐகோர்ட்"

    • பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
    • சபரிமலையில் உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோன்றே, தற்போதும் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சன்னிதானம், பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு யோசனைகளை தெரிவித்திருக்கும் கேரள மாநில ஐகோர்ட், தற்போது மேலும் ஒரு அறிவுரையை கூறியிருக்கிறது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

    நிலக்கல் வாகன நிறுத்தம் தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டுகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனை அவர்கள் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
    • பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.

    நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.

    அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.

    பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

    கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.

    கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை.
    • தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    திருவனந்தபுரம்:

    வழிபாட்டு தலங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "கேரளாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு மற்றும் வாண வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்" என்ற குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு நீதிபதி அமித் ராவல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத வழிபாட்டு தலங்களில் ஒற்றைப்படை மணி நேரத்தில் (நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரம்) பட்டாசு வெடிக்க கேரள ஐகோர்ட் தடை விதித்தது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், நீதிபதி அமித் ராவல் அமர்வு உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் தனது தீர்ப்பில், கொச்சி மற்றும் பிற மாவட்ட போலீஸ் கமிஷனர் உதவியுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சோதனை நடத்தவும், அனைத்து மத ஸ்தலங்களிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை கைப்பற்றவும் துணை ஆட்சியருக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறிய நீதிபதி, கடவுளை சந்தோஷப்படுத்த பட்டாசுகளை வெடிக்க எந்த புனித நூலிலும் உத்தரவு இல்லை என்று கருத்தும் தெரிவித்தார்.

    சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்ய சோதனை நடத்த அறிவுறுத்திய நீதிபதி, தற்போதைய உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பது குறித்து புகார் அளிக்கப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.
    • தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.

    பஸ்கள் மற்றும் வேன்களில் வரக்கூடிய பக்தர்களில் பலர், தங்களது வாகனங்களை அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்று வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    ஆகவே சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய கேரள ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வரக்கூடாது என்றும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

    • விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர்.
    • பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆராதனை கூடத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர். அதாவது விசாரிக்க சென்றபோது தங்களை தரக்குறைவாக பேசியதாக அந்த பெண் மீது போலீசார் குற்றம்சாட்டினர். போலீசாரின் இந்த பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நீதிபதி முன்பு கும்பிட்டபடி நின்றார். இதை கண்ட நீதிபதி, "நீதியின் கோவிலாக கோர்ட்டு உள்ள போதிலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல. எனவே கோர்ட்டிற்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வக்கீல்கள் யாரும் நீதிபதிகள் முன் சாமியை கும்பிடுவது போன்று நிற்க வேண்டியது இல்லை. கோர்ட்டு அறைக்குள் அதற்குரிய மரியாதை, கண்ணியத்துடன் நடந்து கொண்டாலே போதும்" என்றார்.

    பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மனு மீதான விசாரணை முடிவில், புகார் அளித்த பெண் தவறான வார்த்தைகளால் போலீசாரிடம் பேசினார் என்பதை நம்ப முடியவில்லை. எனவே போலீசார் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் கூறினார்.

    மேலும் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக போலீசார் பதிவு செய்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

    • வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும்.
    • போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கொச்சி:

    நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து நேற்று கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

    மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருக்கும் நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் போராட்டம் சட்ட விரோதமானது எனவும், அரசியல்சாசனத்துக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்தது.

    வேலைநிறுத்தம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை மீறிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் மற்றும் மாநிலக்குழுவே பொறுப்பு என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    ×