search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவாட் உச்சி மாநாடு"

    • ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    • மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து அந்த மாநாட்டில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோபைடன், தனது ஆஸ்திரேலிய பயணத்திட்டத்தை திடீரென ஒத்திவைத்ததால், குவாட் மாநாடு சிட்னியில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஜப்பானைத் தொடர்ந்து, பப்புவா நியூகினியாவுக்கு மே 22-ந் தேதி செல்கிறார். அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவர், அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீசிடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்திய வம்சா வளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் உரையாற்ற உள்ளார்.

    இந்த மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குவாட் மாநாடு இடமாற்றப்பட்டுள்ளதால், அது வழக்கமான உச்சி மாநாடாக இருக்குமா அல்லது சாதாரண கூட்டமாக இருக்குமா? என்று டெல்லியில் வெளியுறவு செயலர் வினய் குவாத்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு, "4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும்போது, அது உச்சி மாநாடு தான்" என்று அவர் பதிலளித்தார்.

    • அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.
    • ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    சிட்னி:

    இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    ஜப்பானில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    இந்த நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் தொடராது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்.

    அந்த மாநாட்டில் நாங்கள் 4 பேரும் ஒன்றாக ஆலோசிக்க முயற்சிப்போம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு தரப்பு கலந்துரையாடலை நடத்த முயற்சிப்போம்.

    இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் அடுத்த வாரம் சிட்னிக்கு வருகை தருவது இன்னும் சாத்தியமாக உள்ளது. நாங்கள் குவாட் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அதை பற்றிய கூடுதல் அறிவிப்புகளை வெளியிடுவோம்.

    பிரதமர் மோடி நிச்சயமாக அடுத்த வாரம் இங்கு மிகவும் வரவேற்கத்தக்க விருந்தினராக வருவார். மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின.
    • கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது.

    சிட்னி:

    பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின.

    கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

    மாநாட்டின் முடிவில் இந்தோ-பசுபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்க குவாட் அமைப்பு முடிவு செய்தது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் மே 24-ம் தேதி குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முதல்முறையாக நடத்த உள்ளது என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

    ×