search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பாபிஷேம்"

    • சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
    • வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    பல்லடம்,

    பல்லடம் கடைவீதியில், சுமார் 300 ஆண்டுகள் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பொன்காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், பல்லடம் அறநிலையத்துறை ஆணையர் ராமசாமி, திருப்பணிகுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்தும், வரும் 2024 மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர்.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25-ந் தேதி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து இன்று மலைக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா, மங்கள இசை, முதல்நிலை வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, சந்திரன் வழிபாடு, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

    அதன் பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இவை தவிர போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மற்ற பக்தர்களுக்கு 16 இடங்களில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு சிரமம் இன்றி கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அவர்கள் அடிவாரம், கிரி வீதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பழனி கோவில் வரை இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கண்காணிக்க ஹெலிகேம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகரில் பிறநகர் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    முக்கிய இடங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நாளை ராஜகோபுரத்தில் குடமுழுக்கு நடக்கிறது.
    • இன்று பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கி வருகின்றனர். நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை பழனி கோவில் படிப்பாதை மற்றும் உபசன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    காலை பாதவிநாயகர் கோவில், இடும்பன், கதம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள், படிப்பாதையில் உள்ள சேத்ரபாலகர், சண்டிகாதேவி, விநாயகர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரிஸ்வரர், வள்ளிநாயகி, வேலாயுதசாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்குடஞானதிருவுலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் பக்தர்களுக்கும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    பழனி மலைக்கோவிலில் ராஜகோபுரம் உள்பட பிற சன்னதிகளில் நாளை காலை 8 மணிமுதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை காண 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள் கீழே இருந்து கும்பாபிஷேகத்தை காண வசதியாக அடிவாரம், கிரிவீதிகள், பஸ்நிலையம் உள்பட 18 இடங்களில் அகண்ட எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மலைக்கோவிலில் கோபுர விமான தளத்திற்கு சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க முடியாதவர்கள் பிரகாரத்தில் இருந்தபடியே பார்க்கவும் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டும், தைப்பூச விழாவை முன்னிட்டும் மதுரை-பழனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இன்றும், நாளையும், பிப்ரவரி 3,4,5-ந்தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பழனி வந்து சேரும், மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரையை வந்து சேரும்.

    இந்த ரெயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில்நிலையங்களில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன், கலெக்டர் விசாகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கும்பாபிஷேகத்திற்கு அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கோவில் மற்றும் பழனி நகருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது, தற்காலிக பஸ்நிலையத்திலிருந்து இலவசமாக பஸ்களை இயக்குவது, டிரைவர்கள், கண்டக்டர்களை 3 சிப்டுகளாக பிரித்து இயக்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினர் ஆகியோர் தயார் நிலையில் இருக்கவும், பழனி அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கவும், ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம், அடிவாரப்பகுதிகளில் போதுமான ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தினர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வழிகாட்டி பலகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளது.

    நகரில் சேரக்கூடிய குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பழனி பகுதியில் டிரோன்கள் பறக்க போலீசார் தடைவிதித்துள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, அறங்காவலர் குழுதலைவர் சந்திரமோகன், கோவில் இணைஆணையர் நடராஜன், சுதர்சன், பாரதி, சுரேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன.
    • பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. காலை 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது.

    16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • பழனி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • இன்று 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.

    பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கலச ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்து வருகிறது.

    கடந்த 23-ந்தேதி மலைக்கோவிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் பாதவிநாயகர் கோவில் முதல் படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், குராவடிவேலர் உள்ளிட்ட உபசன்னதிகளில் தெய்வங்களின் திருக்கலசம் அலங்கரிக்கப்பட்டு அருட்சக்தி கொணர்தல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து தெய்வ சக்தி கலசங்களும் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று (புதன்கிழமை) 3, 4-ம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, நெய்வேத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 9.50 மணிக்கு பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து உபசன்னதிகளில் யாகம் நிறைவு பெறுகிறது.

    பின்னர் உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு திரு உலா நடக்கிறது. பின்னர் கிரிவீதிகளில் உள்ள 5 மயில் சிலை, பாதவிநாயகர், சேத்ரபாலர், படிப்பாதை விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் கந்தபுராணம், திருப்புகழ், திருமுறை பாடி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    • இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.

    உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், கோபுரங்களுக்கும் கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள், மிராஸ் பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைக்கு சூரிய கதிரில் இருந்து அக்னி எடுத்தல், யாகசாலையில் இடுதல் ஆகியவை நடைபெற்றது. அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு மூலவர் மற்றும் அனைத்து தெய்வ சன்னதிகளிலும் கலசத்தில் அருட்சக்தி கொணர்தல் நடந்தது.

    பின்னர் சக்தி கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் உள்ள அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் உருவத்துக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் திருமறை, கட்டியம், கந்தபுராணம், கந்தர் அலங்காரம் பாடி வழிபட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு மங்கல இசையுடன் 2-ம் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி, கணபதி பூஜை, கலசபூஜை நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள், பக்தர்களால் திருப்புகழ், திருமுறை பாடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    பின்னர் ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, ஐந்து மந்திர ஆறங்க யாகம் நடந்தது. அதையடுத்து மூலிகை பொருட்கள், விதை, வேர், தண்டு, இலை, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுவகை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடந்தது.

    பின்னர் கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை, மலர்களை கொண்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது கந்தபுராணம், திருமுறை, கந்தர்அனுபூதி பாடினர்.

    அதையடுத்து நேற்று மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது மூலிகைகள், வாசனை திரவியங்கள், தேன், இலை, தண்டு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் இரவு 8.30 மணிக்கு 3-ம் கால யாகம் நிறைவு பெற்று தீபாராதனை, மலர் வழிபாடு, கட்டியம், கந்தபுராணம், திருமுறை, முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. முடிவில் நெய்வேத்தியம், தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.

    பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், இந்த விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. 20-ந்தேதி வரை 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். பின்னர் விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குலுக்கல் முறையில் கடந்த 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வான 2 ஆயிரம் பேருக்கு செல்போன் எண், இமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் 23, 24-ந்தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் வேலவன் விடுதியில் அடையாள சான்றுடன் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று காலை 10 மணி முதல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தேர்வான பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள தேர்வானவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் இருந்தனர். இதனால் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமதிச்சீட்டை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    இந்த அனுமதிச்சீட்டில் வரிசை எண், நேரம், நாள், எங்கு அமர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் கோவிலின் 'ஹோலோகிராம்' முத்திரை இருந்தது.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது.

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். கோவில் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பெருமானால் பல மூலிகைகளை கொண்டு தயாரித்த நவபாஷணத்தால் செய்யப்பட்டது.

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகப்பெருமானை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதையொட்டி கடந்த மாதம் 25-ந்தேதி முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. அன்றைய தினம் ராஜகோபுரம், உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தது. மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    இதற்கிடையே கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது. முன்னதாக புண்ணியாக வாஜனம், கலசபூஜை நடந்தது. அதையடுத்து விநாயகர் பூஜை, விதை தெளித்தல், நறும்புகை, படையல், தீபாராதனை, நெய்வேத்தியம் நடைபெற்றது.

    பின்னர் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்று மங்கல நாண் அணிதல் வழிபாடு நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் எழுந்தருளும் பொருட்டு ஐந்துவகை நூல் சுற்றி, பட்டாடை உடுத்தி சந்தனத்தால் கலசம் அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் ஆனந்தவிநாயகர், கைலாசநாதர், மலைக்கொழுந்து அம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், சண்முகர், வள்ளி-தெய்வானை, சின்னக்குமாரர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தங்கவிமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய கலசங்கள் பாரவேல் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

    அதன்பிறகு மூலவர் சன்னதியில் அருட்சக்தியை கலசத்தில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா', 'வீரவேல் முருகனுக்கு அரோகரா', 'ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். மேலும் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் கலசங்கள் உட்பிரகாரம் வலம்வந்து பாரவேல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட ஆனந்தவிநாயகர், கைலாசநாதர் உள்ளிட்ட சக்தி கலசங்களுடன் மூலவர் கலசம் யாகசாலைக்கு புறப்பாடு நடந்தது. பின்னர் மங்கல இசையுடன் யாகசாலையில் அங்கரிக்கப்பட்ட கும்ப மேடையில் கலசங்கள் வைத்து பூஜைகள் தொடங்கியது. பின்னர் விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள், அறுசுவை சோறு, பலகாரம், சுண்டல், பாயாசம், பால், தயிர், தேன், நெய், 12 வித மூலிகை குச்சிகளை கொண்டு முதற்கால யாக பூஜை நடந்தது. பின்னர் மூலவர் கலசம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட முருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருமறை, சைவ ஆகமம், கட்டியம், கந்தபுராணம் ஆகியவை பாடப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    முன்னதாக கும்பாபிஷேகத்தையொட்டி சூரியனில் இருந்து அக்னி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சூரியக்கதிர்கள் குவிக்கப்பட்டு அக்னி எடுக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட அக்னி கோவிலில் உலா வந்து யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் அக்னி இடப்பட்டது. பின்னர் நெய்வேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், கும்பாபிஷேக உபயதாரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    • 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த 18-ந்தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று திருஆவினன்குடி கோவில் திருப்புகழ் மண்டபத்தில் வேழ வழிபாடு, ஆனிறைவழிபாடு, ஏழுபரி வழிபாடு, நறும்புகை விளக்க படையல், திருவொளி வழிபாடு நடைபெற்றது.

    பழனி மலைக்கோவிலில் தேவஸ்தான 64 மிராசு பண்டாரத்தார் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் அடைதல், பேரொளி வழிபாடு, திருநீறு, திருவமுது வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 2 யானைகளுக்கு கஜ பூஜையும், 7 குதிரைகளுக்கும், பசுமாடுகளுக்கு கோபூஜையும் செய்யப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்றுமாலை திருமகள் திருவழிபாடு, 16 திருக்குடங்களில் திருமகளை பூஜித்தல், 16 வித வேள்வி, 16 கன்னியர், 16 மங்கள வழிபாடு நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து பழனிகிரி வீதி, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி நகராட்சி, தேவஸ்தானம், வருவாய்த்துறை சார்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சப்-கலெக்டர் தலைமையில் நடந்த இந்த பணியில் போலீசார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகிற 27-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு நேற்றுமுதல் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. பழனி மலைக்கோவில் மற்றும் உட்புற சன்னதிகளில் உள்ள 50 கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்றுகாலை 9 மணிக்கு நன்மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், விநாயகர் அகவல், முதல்நிலை வேள்வி, 16 வகை திருநாமவேள்வி, ஞானசிறுவர்கள் வழிபாடு, நிறைவேள்வி ஆகியவை நடைபெற்றது.

    மேலும் கந்தபுராணம், திருப்புகழ், வேல்விருத்தம், மயில் விருத்தம், திருமுறை முற்றோதல் ஆகியவையும் நடைபெற்றது. இன்றுமாலை 7ம் கால வேள்வி வழிபாடு துவக்கம் ஆணைமுகன் வழிபாடு, முளைப்பாழிகை இறைவழிபாடு, மங்கல இசை, அறுசுவை காரங்கள் சமித்து ஆகிய 96 ஆகுதி வேள்வி ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்திற்காக காசி, ராமேஸ்வரம், கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலிருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தங்கள் எடுத்து பாதையாத்திரையாக பழனிக்கு புறப்பட்டனர்.

    இதேபோல பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் எடுத்துவரும் பணி நடந்து வருகிறது. இதனிடையே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு இணையத்தில் நேற்று தொடங்கி இன்றுமாலையுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பல்வேறு ஊர்களிலிருந்தும் பாதையாத்திரையாக ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது இவர்கள் பழனி நோக்கி அரோகரா கோசம் முழங்க வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நாளை காலை கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கும்பாபிஷேகத்திற்காக, கடந்த மாதம் 25-ந்தேதி பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இந்தநிலையில் கும்பாபிஷேகத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் முடிந்துவிட்டது. மேலும் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முருகப்பெருமானின் சிறப்பை விளக்கும் வகையிலான ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தின் மேல் பகுதியில் முருகனின் ராஜா அலங்கார ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.

    இதுதவிர கோபுர கலசம், தங்கக்கவசம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் செப்பனிட்டு, அதில் 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், கோவில் ராஜகோபுர கலசங்கள், தங்கமயில் வாகனம் ஆகியவற்றுக்கு 'தங்க ரேக்' ஒட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இதற்கிடையே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 23-ந்தேதி மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.

    இதற்காக, மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனியில் கும்பாபிஷேகத்துக்கான அனைத்து திருப்பணிகளும் இரவும், பகலுமாக நடைபெற்று வருவதால் தற்போது கோவில் வண்ணமயமாகி புதுப்பொலிவு பெற்றுள்ளது.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பழனியில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணி தொடங்கியது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தொய்வடைந்தது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், ஸ்தபதி மற்றும் ஆன்மிக சான்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த சிலை பாதுகாப்பு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று மூலவர் சிலையை பார்வையிட்டனர். தற்போது பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு பழனி முருகன் கோவிலுக்கு திடீரென்று வந்தனர். பின்னர் கருவறை பகுதியில் உள்ள மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழனியில் நடந்த இந்த திடீர் ஆய்வால் மூலவருக்கு மருந்து சாத்துவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள், ஆன்மிக பெரியோர்களிடையே நிலவுகிறது.

    ×