search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் அச்சம்"

    • கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மேல்வாலிப்பாறை கிராமத்தில் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மேல்வாலிப்பாறை வருசநாடு வனச்சரகத்தை ஒட்டிய பகுதியாகும். இங்கு குறைந்த அளவு குடியிருப்புகள் உள்ளபோதும் மலைப்பகுதியிலேயே தங்கி அவர்கள் விவசாய பணிகள் செய்து வருகின்றனர். தற்போது கடும் கோடைகாலம் நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்புக்குள் வரத்தொடங்கி உள்ளன.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் உள்ளதால் மேல்வாலிப்பாறை கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உணவுக்காக வரும் கரடிகள் வீட்டு சுவற்றை சுரண்டி ஓட்டைப்போட்டு உள்ளே வர முயற்சி செய்கின்றன. அதனை கற்களை கொண்டு பொதுமக்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்தபோதும் இரவு முழுவதும் தூக்கமின்றி அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். எனவே கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மேல்வாலிப்பாறை வனப்பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு கரடிகள் வசிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாப்பிடும் கரடிகள் தண்ணீருக்காக குடியிருப்பை நோக்கி வருகின்றன.

    மேலும் இவர்கள் வசிக்கும் வீடு மண் சுவர் என்பதால் கரையானை தேடி சுவற்றை சுரண்டி வருகின்றன. இவைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கடந்த மாதம் ஆண்டிபட்டி அருகே ஒரு வீட்டிற்குள் கரடி புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வனத்துறை அதனை போராடி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

    தற்போது மேல்வாலிப்பாறை கிராமத்திலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொடர் பீதியில் உள்ளனர்.

    • காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது.
    • கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசோலை அருகே மாங்கா மரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை யானை முற்றுகையிட்டது. பாப்புட்டி என்ற பெண்ணின் வீட்டின் சுவரை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது தூங்கிக்கொண்டிருந்த பாப்புட்டி, அச்சத்தில் சத்தம் போட்டார். அப்பகுதி மக்கள் வந்து காட்டு யானையை விரட்டினர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர். இதேபோல் தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி அருகே பேபி நகரில் மற்றொரு காட்டு யானை புகுந்தது. அப்பகுதியில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சரித்து போட்டு தின்றது.

    இதில் மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பேபி நகர் சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    நேற்று மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் வீடு மற்றும் விவசாய பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தி வருவதால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, காட்டு யானைகள் நடமா ட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

    நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கீழ்குந்தா குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. அங்கு சில வீடுகளை சேதப்படுத்தியது.

    மேலும் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ×