search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கான்பூர் விமான நிலையம்"

    பிரசாரத்துக்கு செல்லும் வழியில் கான்பூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்காவும் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். #LokSabhaElection #RahulGandhi #Priyanka
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா ஆகியோர் தனித்தனியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ராகுலும், பிரியங்காவும் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

    இதில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் அவரது தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதைப்போல உன்னாவ் மற்றும் பாரபங்கி தொகுதிகளில் பிரியங்கா வாக்கு சேகரித்தார். இதற்காக அவர்கள் இருவரும் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் கான்பூர் விமான நிலையம் வந்து இறங்கினர்.

    பின்னர் அங்கிருந்து தங்கள் தொகுதிகளுக்கு செல்லுமுன் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தனது சகோதரர் மீதான பாசத்தை கட்டுப்படுத்த முடியாத பிரியங்கா, ராகுல் காந்தியை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    அப்போது கேமராவுக்கு அருகில் வந்து பேசிய ராகுல் காந்தி, ‘ஒரு நல்ல சகோதரன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை உங்களுக்கு சொல்கிறேன். மிக மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் எனக்கு சிறிய ஹெலிகாப்டர்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் மிகவும் குறுகிய பயணத்தை மேற்கொள்ளும் பிரியங்காவோ பெரிய ஹெலிகாப்டர் பெற்றிருக்கிறார்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

    உடனே பிரியங்கா, ‘அது உண்மை இல்லை’ என சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் ராகுல் காந்தி, ‘ஆனால், நான் அவரை அன்பு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இருவரின் சகோதர பாசத்தை பார்த்த விமான நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் நெகிழ்ந்தனர்.

    பின்னர் இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களின் பாராட்டையும் பெற்றது.  #LokSabhaElection #RahulGandhi #Priyanka
    ×