search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி உடல் கருகி பலி"

    பெண்ணாடம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீப்பற்றியதில் கல்லூரி மாணவி உடல் கருகி பலியானார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகள் வித்யலட்சுமி (18). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிமுத்து தனது மனைவியுடன் வயலுக்கு சென்று விட்டார். வித்யலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் உணவு சமைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு குடிசை வீட்டில் தீப்பற்றியது.

    அந்த தீ வீடு முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அப்போது வித்யலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வர முயன்றார். அதற்குள் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

    சிதறிய தீ அருகில் உள்ள பச்சைமுத்து, இளங்கோவன், ஈஸ்வரன், மணிகண்டன் ஆகியோரின் வீட்டிற்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது.

    வீட்டில் பிடித்த தீ கல்லூரி மாணவி வித்யலட்சுமி மீதும் பற்றியது. இதனால் அவர் வலிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அங்கிருந்த அக்கம் பகத்தினர் தீயை அணைத்து வித்யலட்சுமியை மீட்டனர்.

    அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வித்யலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியில் வித்யலட் சுமி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.

    தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த நகை-பணம் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் சத்யன் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

    இந்த தீ விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×