search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலிதா ஜியோ"

    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. #VerdictonOctober29 #KhaledaZia
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்ட கலிதா ஜியா, இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையில், டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.

    அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவை டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கடந்த 4-10-2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதைதொடர்ந்து, சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்ட கலிதா ஜியா(73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



    ஏற்கனவே தண்டனை பெற்ற ஊழல் வழக்கை தவிர, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் அந்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கில் அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

    தனக்கு உடல்நலம் சரியில்லாததால் இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கலிதா ஜியா சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்றுகொள்ள டாக்காவில் உள்ள ஐந்தாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி முஹம்மது அக்தருஸ்ஸமான் மறுத்துவிட்டார். தொர்ந்து வழக்கு விசாரணையை அவர் நடத்தி வந்தார்.

    தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் வரும் 29-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தவிர பஸ் மீது பெட்ரோல் குண்டுவீசி 8 பேரை கொன்ற வழக்கு மற்றும் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கு ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ள கலிதா ஜியா தண்டனைகளை எதிர்நோக்கி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #VerdictonOctober29 #KhaledaZia #KhaledaZiagraftcase 
    ×