search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா முதலமைச்சர்"

    • அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன.
    • இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி (வயது 61). நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் கழிவறையில் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சுகாதார அமைச்சர் கே சுதாகர் மற்றும் பல பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.   


    உமேஷ் கட்டியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன், அவர் எனக்கு சகோதரராக இருந்தார்.  அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாகேவாடியில் அரசு மரியாதையுடன் உமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் உமேஷ் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாகேவாடியில் பிறந்த உமேஷ் கட்டி, ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். 

    • வீர சாவர்க்கர் பேனர் குறித்து சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார்.
    • சித்தராமையா கார் மீது பாஜகவினர் முட்டை வீசி போராட்டம்.

    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலம் சிவமொக்காவில் சுதந்திர தின விழாவையொட்டி வீர சாவர்க்கரின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டது குறித்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வீர சாவர்க்கர் படத்தை வைத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு கர்நாடகா பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு சென்ற சித்தராமையாவை முற்றுகையிட்ட பாஜகவினர், அவரது கார் மீது முட்டைகளை வீசியதுடன் கருப்புகொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தமது தந்தையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்தராமையாவின் மகன் மகன் யதீந்திரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்துமாறு கர்நாடகா டிஜிபியிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

    • இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
    • தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்

    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    ×