search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    பெங்களூரு:

    இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூரு ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.

    மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. தற்போது பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவின் பெங்களூரு, குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×