search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பாநதி அணை"

    • நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது.
    • பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் அமைந்துள்ள கருப்பாநதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது.

    இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையானது நேற்று 69 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நிரம்பி வழிகிறது. அந்த நீரானது கடையநல்லூர் நகர் பகுதியில் செல்வதால் பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை சார்பில் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாசனத்திற்காக கருப்பாநதி அணை நீரை இன்று காலை திறந்து விட இருந்த நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் கருப்பாநதி அணை நிரம்பி வழிந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து கடையநல்லூர் தாலுகா, கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    • நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.
    • மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதிய நேரத்திற்கு பின்னர் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது. பேட்டை, அபிஷேகப்பட்டி, சீதபற்பநல்லூர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் பயங்கர இடி-மின்னலும் இடித்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லை, பாளை பகுதியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரியில் தொடர்ந்து ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் சுமார் 1 மணிநேரம் மழை பெய்தது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு நேற்று ஒரே நாளில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    ×