search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருந்தலை புழு"

    • கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.
    • தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி, பிரதானமாக உள்ளது. கடந்த 2ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.தேங்காய்க்கு 23 முதல் 25 ரூபாய் விலை கிடைத்தால் தான் உர விலை, விவசாய தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்ட முடியும் என விவசாயிகள் கூறி வந்தனர்.ஆனால் தோட்டங்களில் இருந்து தேங்காய்க்கு 8 - 9 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தொடர்ந்து விலை வீழ்ச்சி தென்பட்ட நிலையில் விவசாயிகள் தென்னை மரங்களை பராமரிப்பதில் முழு கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் காங்கயம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தென்னை மரங்களில் கருந்தலைப்புழுக்களின் தாக்குதல் தென்பட துவங்கியுள்ளது. இதனால் தென்னை மர இலைகள் காய்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறியுள்ளன. ஏற்கனவே, தேங்காய் விலை வீழ்ச்சியால் ஆங்காங்கே சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளுக்கு, இப்பிரச்சினை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது குறித்து, வேளாண் துறை மற்றும் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

    இதனிடையே தென்னை விவசாயத்தில், மரத்தின் வயதுக்கு ஏற்ப ஊடுபயிர் சாகுபடி செய்து வருவாய் ஈட்டலாம் என தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடுமலை மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில், 12,500 ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள், காய் மற்றும் பயிறு வகை சாகுபடியை காட்டிலும் தென்னை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    தென்னையில் ஊடுபயிராக மரத்தின் வயதுக்கு ஏற்ப பயிர்களை பயிரிட வேண்டும். தென்னை நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 வயது வரை கடலை, எள்ளு, நெல், வாழை போன்றவை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.இந்த 8 ஆண்டு காலத்தில் சூரியஒளி ஊடுபயிர்களுக்கு நன்றாக கிடைக்கும். இதனால் பயிர்கள் செழிப்பாக வளரும்.

    தென்னையின்8 வயது முதல் 15 வயது வரை, மரத்தின் நிழல் அதிக அளவு இருக்கும். அப்போது நிழலில் வளரும் தோட்டக்கலை பயிர்களான, உளுந்து, கொள்ளு, பாசி பயிறு, சோயா மற்றும் கால்நடை தீவன பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

    20 வயதிற்கு மேல் தென்னையில் ஊடுபயிராக, ஜாதிக்காய், வாழை, குறுமிளகு போன்றவை பயிரிடலாம். இதில் குறுமிளகு நன்கு விளைச்சல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு செடியில் வருடத்திற்கு 2 கிலோ வரை குறுமிளகு கிடைக்கிறது.ஒரு ஏக்கர் தென்னையில் 70 மரம் வரை நடவு செய்யலாம். இதில் ஊடுபயிராக ஒரு மரத்திற்கு ஒரு குறுமிளகு செடி பயிரிட்டால் வருடத்திற்கு 140 கிலோ குறுமிளகு கிடைக்கிறது. இதில் நன்றாக வருவாய் கிடைக்கும்.ஊடுபயிர் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தோட்டத்தின் தண்ணீர், உரம், ஆள் கூலி போன்ற செலவினங்களுக்கு பயன்படுத்தலாம். தென்னையில் கிடைக்கும் வருமானம் விவசாயிகளுக்கு முழுவதுமாக கிடைக்கும்.

    இத்தகவலை ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும்.
    • மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும்.

    மடத்துக்குளம்,

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் 62 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.கருந்தலை புழு, அனைத்து வயது தென்னை மரத்தையும் தாக்கக்கூடியது. இப்புழு ஆயிரக்கணக்கில் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கி, இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள், தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல் காணப்படும்.

    கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும்.மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டருக்கு 3 ஆயிரம் என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னந்தோப்புகளில் விட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு, டைக்குளோர்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05 சதவீதம் (1 மி.லி.,) இதில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.இதனைக் கட்டுப்படுத்த வேர் வழியாக பூச்சி மருந்து செலுத்தலாம். பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்திற்கு காய்களையோ, இளநீரையோ உபயோகப்படுத்தக்கூடாது.

    மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 36 சதவீதம், எஸ்.எல்., என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10 மி.லி., உடன் 10 மி.லி., தண்ணீர் கலந்து வேர் வழியாக செலுத்த வேண்டும்.மேலும் ஆலோசனைகளுக்கு, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் 89407 03385 மற்றும் அருகிலுள்ள உள்ள வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஒட்டுண்ணிகள், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×