search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பல் தீ விபத்து"

    ரஷியாவின் கிரிமியா பகுதியில் சமீபத்தில் இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்தனர். காணாமல்போன 6 இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Kerchstrait #Shipaccident #Indiansailorskilled
    கிரிமியா:

    ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரிமியா பகுதியில் கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரிமியா பகுதி முன்னர் உக்ரைனில் இருந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது.

    கிரிமியா பகுதியில் உள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் இரு சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.

    அப்போது திடீரென கியாஸ் டேங்கரில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ இரு கப்பல்களுக்கும் பரவியது. விபத்தை சந்தித்த இரு கப்பல்களில் ஒன்றில் 8 இந்தியர்கள் உள்பட 17 பணியாளர்கள் இருந்தனர். மற்றொரு கப்பலில் 7 இந்தியர்கள் உள்பட 15 பணியாளர்கள் இருந்தனர்.  

    இவ்விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் ரஷிய கடற்படையை சேர்ந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கப்பல் பணியாளர்களில் 12 பேர் மட்டுமே உயிருடன்  மீட்கப்பட்டனர். இதுவரை 14 பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

    இறந்த இந்தியர்களின் பெயர் விபரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பினல் குமார் பாரத்பாய் டான்டெல், விக்ரம் சிங், சரவணன் நாகராஜன், விஷால் டோட், ராஜா தேவநாராயண் பானிகிரஹி, கரண்குமார் ஹரிபாய் டான்டெல் ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், காணாமல் போன 6 இந்தியர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kerchstrait #Shipaccident #Indiansailorskilled
    ×