search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடவில்லை"

    புதுவையில் பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டது.

    அதே போல் புதுவையிலும் முழு அடைப்பு நடத்தப்படும் என்று தி.மு.க.வினர் அறிவித்து இருந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.

    அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதுவையில் கடைகள் நிறைந்து காணப்படும் நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மி‌ஷன் வீதி, சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, பாரதி வீதி, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை, எஸ்.பி. பட்டேல் சாலை, புஸ்சி வீதி, கடலூர் சாலை, விழுப்புரம் சாலை, வழுதாவூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    அதேபோல் பெரிய மார்க்கெட், முத்தியால் பேட்டை மார்க்கெட், சின்னக்கடை மார்க்கெட், முதலியார் பேட்டை மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டு இருந்தன.

    ஒரு சில இடங்களில் மட்டும் பெட்டிக்கடைகள் திறந்து இருந்தன. அனைத்து கடைகளையும் மூடும்படி வற்புறுத்தி தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் வீதி, வீதியாக சென்றனர். இதனால் திறந்து இருந்த ஒன்றிரண்டு சிறு, சிறு கடைகளும் மூடப்பட்டன.

    காமராஜர் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இதை பார்த்த தி.மு.க.வினர் பெட்ரோல் பங்க் அலுவலக கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதன் பிறகு அந்த பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

    இதே போல் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

    புதுவையில் இன்று முற்றிலும் பஸ்கள் ஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தமிழக அரசு பஸ்கள் நேற்று இரவே நிறுத்தப்பட்டன.

    சென்னையில் இருந்து புதுவை வழியாக கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படும். இன்று அவையும் நிறுத்தப்பட்டன. தமிழக அரசு பஸ்கள் எதுவுமே புதுவைக்கு வரவில்லை.

    அதே போல் புதுவையில் அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் முற்றிலும் ஓடாததால் வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் பஸ் நிலையத்திலேயே முடங்கி இருக்கிறார்கள்.

    ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாம் மிகவும் சிரமப்பட்டனர். முழு அடைப்பையொட்டி அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முழு அடைப்பினால் புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது.
    ×