search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழைகளுக்கு பணம்"

    ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்க தடை கோரிய வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
    மதுரை:

    மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ந்தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில், வறுமை கோட்டிற்குகீழ் உள்ள 60 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

    மேலும் இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மாதம் 24-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் இந்த திட்டம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    4 நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்தை வழங்குவது என்பது சாத்தியமல்ல. மேலும் கஜா பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழ்நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாகவும், அவர்களின் கவனத்தை அ.தி.மு.க.வை நோக்கி திசை திருப்பும் விதமாகவும் இந்த அறிவிப்பு உள்ளது.

    நிதிநிலை அறிக்கையில், தமிழகம் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி கடனில் உள்ளது என்றும், இதற்கு ரூ.29 ஆயிரத்து 624 கோடி வட்டியாக செலுத்தப்பட்டு வருகிறது எனவும், அரசின் நிதிப்பற்றாகுறை ரூ.44 ஆயிரத்து 176 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கடன் சுமை அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அறிவித்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதில் சிக்கலும், முறைகேடுகளும் நடக்கும். எனவே கணக்கிடுவதில் உள்ள முரண்களைக் களைந்து தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு நிதியை வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #MaduraiHC

    ×