search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்"

    வருகிற 28-ந்தேதி எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2900 ஆகும். இதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 455 போக 2445 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

    இதுதவிர 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போக 783 இடங்கள் இருக்கின்றன.

    மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றை சேர்த்து 3355 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    இன ஒதுக்கீட்டின்படியும், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முறையேயும் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 720-க்கு 96 மதிப்பெண் பெற்று இருந்தாலே தகுதி உடையவராக கருதப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிப்பதற்கு நீட் தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். ஓ.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி. என்ற இன ஒதுக்கீட்டின்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படுவதால் அந்த வரம்பிற்கு உட்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் நீட் தேர்வில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும் இந்த வருடம் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நாளை மறுநாள் (11-ந்தேதி) முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப் படிவம் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுதவிர மருத்துவக் கல்வி வெப்சைட்டில் இருந்தும் பதிவிறக்கும் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 19-ந்தேதி மாலை 5.15 மணிக்குள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் விபர குறிப்புகளில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை முழுமையாக படித்து படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    அதனை பின்பற்றாத விண்ணப்பதாரர்கள் படிவங்கள் நிராகரிக்கப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

    2018-19ம் ஆண்டு மருத்துவ படிப்பதற்கான மாணவர் சேர்க்கை குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் 11-தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பம் பெறுவதற்கு 19-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை போல எப்படியும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர் பார்க்கிறோம்.

    விண்ணப்ப படிவங்கள் வந்தபிறகுதான் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், ஜாதி அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். இப்போதே தோராயமாக கட்-ஆப் மதிப்பெண்களை கூற இயலாது.

    மொத்தம் பெறப்பட்டுள்ள மாணவர்களின் மதிப்பெண், மற்றும் இன ஒதுக்கீட்டை பின்பற்றி ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும். வருகிற 28-ந்தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தற்போது உள்ள நிலவரப்படி 3355 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். மதுரை, நெல்லை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் கூடுதலாக 250 எம்.பி.பி.எஸ். இடங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த இடங்கள் கிடைத்தால் 2-வது கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MBBS
    ×