search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி வேட்பாளர்"

    ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு நாளை நடைபெறும் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாக முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே தெரிவித்துள்ளார். #Mugabe #election
    ஹராரே:

    ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

    இதனால், ஆளும் ஷானு - பி.எப். கட்சியில் பிளவு ஏற்பட்டது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காக்வாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டனர். ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தின் கண்காணிப்பில் சிறை வைக்கப்பட்டனர். 

    ஜனநாயக ஆட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு துப்பாக்கி முனையில் ஆட்சி நடத்த ராணுவம் முயற்சிப்பதாக முகாபே குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே, அதிபர் முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நடைபெற்றது.

    முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

    ராபர்ட் முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை அதிபர் நியமித்தும் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளும்கட்சியின் புதிய தலைவராக முகாபேவால் முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் அதிபராகவும் பதவியேற்றார்.

    ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  ராபர்ட் முகாபே போட்டியிடவில்லை. தற்போதைய அதிபர் எம்மர்சன் நாங்காக்வா(75) மற்றும் பிரபல வழக்கறிஞரும், கிறிஸ்தவ மதபோதகருமான நெல்சன் சாமிசா(40) இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்குமே போதிய வாக்குகள் கிடைக்காமல் வரும் செப்டம்பர் 8-ம் தேதி இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறலாம் என ஜிம்பாப்வே ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தலைநகர் ஹராரேவில் உள்ள தனது இல்லத்தில் ராபர்ட் முகாபே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு (எம்மர்சன்) நாளை நான் வாக்களிக்க மாட்டேன். எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் நெல்சன் சாமிசாவுக்குதான் வாக்களிக்கப் போகிறேன் என்று முகாபே பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனது இந்த முடிவு ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் மக்களாட்சி மலர வழி வகுக்கும் என நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #Mugabe #election
    ×