search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரடங்கு உத்தரவு"

    • நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டங்களை இடிக்க சென்றபோது அதிகாரிகள் மீது தாக்குதல்.
    • வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதி ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியது. இதனால் வன்முறை வெடித்தது.

    இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தின் உத்தரவுபடி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஹல்த்வானியின் வான்புல்புரா பகுதியில் கட்டடத்தை இடிக்க முயன்றபோது, பதற்றம் நிலவியது. அங்கு கூடியிருந்தவர்கள் போலீசார், அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 போலீசார், பல அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

    இருந்தபோதிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முறைகேடாக கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உள்பட அங்கு வசித்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பை இடித்து தள்ளியதுடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சூழ்நிலை அத்துமீறி வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக நேற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இது தொடர்பாக வருகிற 14-ந்தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

    • மெய்டேய் சமூகத்தினரை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும்.
    • ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கவுகாத்தி:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 3ம் தேதியன்று குக்கி பழங்குடியின அமைப்பு சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டேய் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை பல்வேறு இடங்களுக்கும் பரவி 70க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இடம்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மோதல் உருவானது. மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநில மக்கள்தொகையில் மெய்டேய் சமூகத்தினர் 64 சதவீதம் உள்ளனர். எனினும், மலைப் பகுதிகளில் பழங்குடியினர் அல்லாதவர்கள் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், மாநிலத்தின் 10 சதவீத நிலப்பகுதியிலேயே அவர்கள் வசிக்கின்றனர். அவர்களை எஸ்டி பிரிவில் சேர்த்தால் மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியும். எனவே, அவர்களின் இந்த கோரிக்கை பழங்குடியினரை ஆத்திரமடைய செய்துள்ளது.

    பாஜக அரசாங்கம் தங்களை காடுகளிலிருந்தும் மலைகளில் உள்ள வீடுகளிலிருந்தும் அகற்றுவதை நோக்கமாக கொண்டு திட்டமிட்டு செயல்படுவதாக குக்கி சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். போதைப்பொருளுக்கு எதிரான போர் என்று கூறுவதும் தங்களை வெளியேற்றுவதற்கான ஒரு சூழ்ச்சி என்றும் கூறுகின்றனர்.

    இரு சமூகங்களிடையே மோதல் உருவானதில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியளித்துள்ளார். மேலும் இரு சமூகத்தினரையும் சந்தித்து பேசி உள்ளார்.

    • வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி ஆட்டிப்படைத்தது.

    பெரும்பாலான உலக நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என கூறி வந்தது.

    ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை வடகொரியா உறுதி செய்ததது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தொற்று பாதிப்புக்கு ஆளானதாக அப்போது தகவல்கள் வெளியாகின. எனினும் கொரோனாவை வென்றதாக ஆகஸ்டு மாதமே வடகொரியா அறிவித்தது.

    இந்த நிலையில் வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று பரவல் எழுச்சி பெறும் அபாயம் எழுந்துள்ளது.

    இதனையடுத்து, பியாங்யாங் முழுவதும் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி பியாங்யாங்கில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளன.

    மேலும் ஒவ்வொரு நாளும் பல முறை உடல் வெப்பநிலையை பரிசோதித்து, அதன் விவரங்களை சுகாதார அதிகாரிகளிடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஊரடங்கு தொடர்பான அரசின் உத்தரவில் கொரோனா பரவல் குறித்து குறிப்பிடவில்லை என்றபோதும், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு கொரோனாவின் தாக்கமே காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் அண்டை நாடான சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.

    இதைத்தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதோடு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    இந்த சூழலில் வடகொரியாவின் தலைநகரில் நோய் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பியாங்யாங்கை தொடர்ந்து, வடகொரியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
    • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. கூலி தொழிலாளி. இவரது மனைவி மணி. மகள் துர்கா பவானி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியதால் கணவன், மனைவி, மகள் 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். தொற்று பரவல் குறைந்ததை அடுத்து சூரியபாபு மட்டும் வேலைக்கு சென்று வந்தார்.

    ஆனால் சூரியபாபுவின் மனைவி, மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் தவிர்த்து வந்தனர். தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சூரியபாபு அழைத்தார்.

    ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரியில் சூரியபாபு தெரிவித்தார். டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சூரியபாபு வீட்டிற்கு வந்து தாயும், மகளையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர்.

    அப்போது அவர்கள் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாக கூறி கதவை திறக்க மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்ததால் இருவருக்கும் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    • அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவின் வுகான் நகரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கடைசியில் முதன் முதலில் கொரோனா நோய் கண்டறியப்பட்டது.

    அதன் பிறகு இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த தொற்று வேகமாக பரவியது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிர் இழந்தனர்.

    சுமார் 2 ஆண்டு காலத்துக்கும் மேலாக உலகத்தை ஆட்டிப்படைத்த கொரோனா நோய் படிப்படியாக குறைந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் இன்னும் தொற்று முடிவுக்கு வரவில்லை.

    சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா பலி இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று முதன் முறையாக தலைநகர் பீஜிங்கில் கொரோனாவுக்கு 87 வயது முதியவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 91 வயது பெண் ஒருவரும் உயிர் இழந்து விட்டார்.

    நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 24,215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கி விட்டதாலும் அடுத்தடுத்து 2 பேர் பலியாகி விட்டதாலும் பீஜிங்கில் மறுபடியும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், மற்றும் அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது. தேவை இல்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

    கொரோனா பரவல் அதிகரிப்பால் விமான நிலையங்கள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க சீனா அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    • ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது.
    • மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    பீஜிங் :

    சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென உச்சம் தொட்டது. இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

    இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை அமலில் இருந்தன. இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

    இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து அந்த மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.
    • ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டிருந்தது. பொதுமக்களும் முக கவசம் அணியாமல் சகஜ நிலையில் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா ஜூன் மாதம் மீண்டும் பரவுவது அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இதனால் முக கவசம் அணிய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

    கொரோனா பரிசோதனையையும் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று 29 ஆயிரத்து 524 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா பரவியது கண்டறியப்பட்டது.

    அந்த வகையில் 137 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 909 பேர், செங்கல்பட்டில் 352 பேர், திருவள்ளூரில் 100 பேர், கோவையில் 96 பேர், காஞ்சிபுரத்தில் 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. நேற்றைய நிலவரப்படி 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 745 பேரும், செங்கல்பட்டில் 1,923 பேரும், கோவையில் 693 பேரும், திருவள்ளூரில் 627 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

    இதனால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் முக கவசம் அணியுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து பல பகுதிகளில் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிகாரிகள் விளக்கினார்கள்.

    ஏற்கனவே முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வேறு என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன என்பது அரசின் சார்பில் பின்னர் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×