search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை ஹாக்கி"

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது.
    • முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து இந்த போட்டியை வெற்றியோடு ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியுள்ளது.

    கோலாலம்பூர்:

    13-வது ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. வருகிற 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, 6 முறை சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    கடந்த ஆண்டு 4-வது இடத்தை பெற்ற இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஸ்பெயின், கனடா தென்கொரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் 11-வது மற்றும் 16-வது நிமிடத்தில் அராய்ஜீத் சிங் ஹூன்டல் கோல் அடித்து அசத்தினார். 30-வது நிமிடத்தில் அமன்தீப்சிங் கோல் போட்டார். இதனால் முதல் பாதியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 38-வது நிமிடத்தில் தென்கொரியாவின் டோயுன் லிம், 45-வது நிமிடத்தில் மிங்வான் கிம் ஆகியோர் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினர். இதற்கு மத்தியில் 41-வது நிமிடத்தில் ஹூன்டல் மேலும் ஒரு கோல் போட்டு 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

    முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து இந்த போட்டியை வெற்றியோடு ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியுள்ளது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 7-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஸ்பெயினை நாளை எதிர்கொள்கிறது.

    மற்ற ஆட்டங்களில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும் (ஏ பிரிவு), பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தையும், ஜெர்மனி 5-3 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும் (பி பிரிவு) தோற்கடித்தது.

    • ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
    • வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜன.13-ந்தேதி ஸ்பெயினை சந்திக்கிறது.

    1975-ம் ஆண்டு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்த இந்திய அணி அதன் பிறகு எந்த பதக்கமும் வென்றதில்லை. நீண்ட கால ஏக்கத்தை உள்நாட்டில் நடக்கும் இந்த போட்டியின் மூலம் இந்திய வீரர்கள் தணிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மகுடம் சூடினால் வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், அணியின் உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய வெள்ளிப்பதக்கத்தை பெற்றால் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும். வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினால் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் அளிக்கப்படும்.

    ஹாக்கி இந்தியா செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஹாக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'சீனியர் உலகக் கோப்பை போட்டியில் பதக்க மேடையில் ஏறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இந்த ஊக்கத்தொகை, வீரர்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம். உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் பதக்கம் வெல்லும் போது நிச்சயம் அது நமது வீரர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்' என்றார்.

    ×