search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை ஹாக்கி"

    • இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
    • உலக கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அவர் இந்த முடிவை அறிவித்திருக்கிறார்.

    உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த தொடரில் இந்திய அணி குரூப் டி-யில் இடம்பெற்றிருந்தது. இந்த பிரிவில் 2-ம் இடம்பிடித்ததால் முதலிடம் பெற்ற இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு சென்றது. இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிளாசிஃபிகேஷன் ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கிரஹாம் ரெய்ட் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் அனலைடிக் பயிற்சியாளர் கிரேக் கிளார்க், அறிவியல் ஆலோசகர் மிட்ச்செல் டேவிட் ஆகியோரும் இன்று தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் திர்கே கூறுகையில்:-

    இந்திய அணிக்கு கிரஹாம் ரெய்ட் அளித்த பங்களிப்பை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம். அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க பாடுபட்டுள்ளார்.

    குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் அவர் அணியை சிறப்பாக கையாண்டார். அனைத்து பயணங்களும் கடினமான பாதையை தாண்டி செல்ல வேண்டும். அணியை புதிய முறையில் நாங்கள் அணுகுவதற்கான நேரம் வந்துவிட்டது.

    என்று அவர் தெரிவித்தார்.

    • இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.
    • இறுதிப்போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.

    புவனேஸ்வர்:

    15-வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்றது. தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி அணிகள் நேருக்குநேர் மோதின.

    மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் 2 கோல்களை அடித்தது. ஜெர்மனி ஒரு கோலை அடிக்க 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஜெர்மனி மீண்டும் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற சம நிலை வகித்தன. இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

    இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.

    • 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது.
    • இதில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

    ரூர்கேலா:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 15-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    ரூர்கேலாவில் நேற்று நடந்த 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்திய அணியில் அபிஷேக் 5-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12-வது நிமிடத்திலும், ஷாம்ஷெர் சிங் 45-வது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 49-வது நிமிடத்திலும், சுக்ஜீத் சிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் மிம்வி சாம்கிலோ 49-வது நிமிடத்திலும், முஸ்தபா காசிம் 60-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அர்ஜென்டினாவுடன் இணைந்து 9-வது இடத்தைப் பெற்றது.

    • பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி முன்னிலையில் இருந்தது.
    • பெனால்டி ஷுட்அவுட் முறையில் ஜெர்மனி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.

    ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

    போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2-0 என சமநிலை பெற்றது. இதனால் பெனால்டி ஷுட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஜெர்மனி 4-3 என வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    சகோதரர்கள் மேட்ஸ் மற்றும் டாம் இருவரும் மான்செங்லாட்பாக் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கல்லூரியில் படித்து தற்போது கொலோனில் உள்ள ரோட்-வீஸ் கோல்ன் கிளப்பில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய நாடுகளில் தென் கொரிய அணி மட்டுமே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • ஜெர்மனி அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற கிராஸ்ஓவர் போட்டியில் தென் கொரிய அணி, 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் 3-2 என தென் கொரியா வெற்றி பெற்றது. ஆசிய நாடுகளில் தென் கொரியா மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி, 5-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. ஜெர்மனி அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

    • ஹர்திக் சிங்கிற்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடியது. அப்போது இந்திய அணியின் நடுக்கள வீரர் ஹர்திக் சிங்கின் (வயது24) தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் குணமடையாததால் அவர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி பிரிவு லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்றது. எனவே, காலிறுதியை உறுதி செய்வதற்கான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது. தற்போது முன்னணி வீரர் ஹர்திக் சிங் காயம் காரணமாக விலகியிருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஹர்திக் தனி ஆளாக அற்புதமான கோல் அடித்தார். வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • 'உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் துவக்க விழாவின்போது மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான ஹாக்கி மட்டை மணல் சிற்பத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கட்டாக் மகாநதியின் கரையில் 105 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை 5000 ஹாக்கி பந்துகளை கொண்டு அலங்கரித்துள்ளார்.

    இந்த நீண்ட மணல் சிற்பத்தை உலகின் மிகப்பெரிய மணல் ஹாக்கி மட்டையாக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியா அங்கீகரித்துள்ளது.

    தனது மணல் ஹாக்கி மட்டை புதிய உலக சாதனை படைத்திருப்பது குறித்து சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்தியாவிடம் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறி உள்ளார்.

    • உலக கோப்பை ஹாக்கி போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
    • பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்தது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. அதன்படி இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கொரியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்தது.

    • கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

    ரூர்கேலா:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது.

    இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் இருப்பதால் அந்த அணி டி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    இந்தியாவும், இங்கிலாந்தும் முதல் ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து அணிவேல்ஸ் அணியை 5-0 என வென்றது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி 19ம் தேதி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோத உள்ளது. 

    • தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான்.
    • இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை-2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களில் மூன்றாவது முறையாக இந்தியா உலகக் கோப்பை போட்டியை நடத்துகிறது. 2010ல் டெல்லியிலும், 2018ல் ஒடிசாவின் புவனேஸ்வரிலும் போட்டியை நடத்தியது.

    இந்தியாவுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியிருப்பது குறித்து பெல்ஜியம் ஹாக்கி வீரர் எலியட் வான் ஸ்ட்ரைடாங்க் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அவர் கூறியதாவது:-

    கடந்த நான்கு உலக கோப்பை தொடர்களில் மூன்று தொடர்களை ஒரே நாட்டில் விளையாட விளையாட்டு அமைப்பு ஒப்புக்கொள்வது எப்படி சாத்தியம்? இந்தியா இந்த முறையும் போட்டியை நடத்துவது வருத்தமளிக்கிறது.

    ஆனால், தினமும் 20,000 இருக்கைகள் கொண்ட மைதானங்களை ரசிகர்களால் நிரப்பக்கூடிய ஒரே நாடு இந்தியாதான். பருவநிலை போட்டியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஹீரோ அல்லது ஒடிசா போன்ற உலகளாவிய ஸ்பான்சர்கள் உள்ளனர். போட்டியை நடத்தும் நாடு குறித்த தேர்வானது, நிதி ரீதியாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் விளையாட்டைப் பொருத்தவரை நியாயமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுகின்றன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-0 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்பெயின் அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் வீணடித்தது.
    • இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    ரூர்கேலா:

    உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    12வது நிமிடத்தில் துணை கேப்டன் அமித் ரோகிதாசும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். அதன்பின்னர் இரு தரப்பிலும் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த நிலையில், அதில் ஒன்றை ரோகிதாஸ் கோலாக மாற்றினார். இதேபோல் ஸ்பெயின் அணி மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. ஆனால் அனைத்தையும் வீணடித்தது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

    ×